Breaking News

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன் : சிவாஜிலிங்கம் அறிவிப்பு!

 


தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதில் முரண்பாடுகள் ஏற்பட்டால் தான் சுயேட்சையாகப் போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் என்ற விடயம் பேசப்படுகிறது.

எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார். அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், நான் சுயேட்சையாக போட்டியிடுவேன்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் சிவில் சமூகத்திற்கு மக்கள் ஆணையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அது தவறானது. மக்கள் தங்கள் பிரதிநிதியாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளனர். ஆனாலும் மக்கள் தமக்கானதை தாமே தெரிவு செய்வார்கள்.

அவ்வாறு மக்களால் உருவானதே சிவில் சமூகம். அவர்களுக்கும் தமக்கு என்ன தேவை என்பதனை தீர்மானிக்கவும் சொல்லவும் முடியும்” என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.