Breaking News

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஐந்தாவது நாளாக தொடரும் அகழ்வுப் பணி!

 


கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது.

குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெறுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலே கடந்த 29.06.2023 அன்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் கடந்த 06.09.2023 அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில் 09.09.2023 வரை நான்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டதோடு இரண்டு உடற்பாகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில் நேற்று (10) அகழ்வுப் பணிகள் இடம்பெறவில்லை இன்று (11) ஐந்தாவது நாளாக இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை துப்பாக்கி சன்னங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.