Breaking News

இந்து மக்கள் கொண்டாடும் மஹாசிவராத்திரி இன்று!

 


மகா சிவராத்திரிஇந்து மதத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டு, விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்து நாட்காட்டியின்படி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி (மாசி 6ஆம் தேதி ) இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

 இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்குசிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு.

அதிலும் இந்த வருடம் 2023ஆம் ஆண்டு பிரதோஷ விரதமும், மகா சிவராத்திரியும் ஒரே நேரத்தில் வருகிறது. பிரதோஷ விரதம் இம்முறை சனிக்கிழமையில் வருவதால், இது சனி பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில், விரதம் இருப்பவர்களுக்கு, சிவபெருமான் ஆண் குழந்தை பாக்கியத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது.

அம்மனுக்கு நவராத்திரி, சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

1. நித்திய சிவராத்திரி

2. மாத சிவராத்திரி

3. பட்ச சிவராத்திரி

4. யோக சிவராத்திரி

5. மஹா சிவராத்திரி

இதில் மஹா சிவராத்திரி சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று வருகிறது. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.

மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.