இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபு-தமிழாக்கம்
சட்டத்தின் ஆட்சிக்கான கோட்பாடுகள், மனித உரிமைகள், அனைத்து நபர்களதும் சமத்துவம் மற்றும் மக்களது சுயநிர்ணய உரிமைக்கு அமைவாகவும், இலங்கைத் தீவின் அனைத்து நபர்களுக்கும் நிலையான அமைதியைக் கொண்டு வருவதற்கு உறுதி பூண்டும், இத்தீவில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாண்புமிகு நோர்வே அரசும் நோர்வே மக்களும் சர்வதேச சமூகமும் ஆற்றும் சேவைகளைப் பாராட்டி ஏற்றுக்கொண்டு, தமிழ்மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையிலான சமாதான நடவடிக்கைகள் சவால்கள் நிறைந்த வரலாறாக அமைந்திருந்தாலும், அமைதி வழியிலான தீர்விற்கு உண்மையான வாய்ப்பு இருப்பதை இனம்கண்டு, இறுதித் தீர்வை அடைவதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க, சட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்து, வடக்குக்கிழக்கிலே மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகள் அனைத்தையும் செயற்றிறனுடன் விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் வடக்குக் கிழக்கு மக்களது உடனடித் தேவைகளை வழங்குவதற்காக வடக்குக் கிழக்குப் பிராந்தியத்திற்கு ஓர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை நிறுவுவதற்கு உறுதி பூண்டு, தமிழ்மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவுகள் பற்றிய வரலாறு, வாக்குறுதிகளை மீறிய ஒரு செயல் முறையாக இருந்தமையையும் இலங்கை அரசுக்கும் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் மக்களது பிரதிநிதிகளுக்கும் இடையே காத்திரமாகச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த இலங்கை அரசுகளால் ஒருதலைப்பட்சமாக, மதிக்கப்படாது முடிவிற்குக் கொண்டு வந்தமையையும் கவனத்திலெடுத்து, அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த அரசுகள் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இனரீதியான துன்புறுத்தல்,
பாரபட்சம், அரச வன்முறை மற்றும் அரசுகள் பின்னிருந்து நடத்திய வன்முறை ஆகியனவற்றை மனதில் நிறுத்தியும், 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தமிழ்மக்களுக்கு ஒரு சுதந்திர, இறைமையுள்ள மதசார்பற்ற அரசை அமைக்குமாறு தமிழ்மக்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமது பிரதிநிதிகளுக்கு ஆணை வழங்கியிருந்தமையைக் கவனத்திலெடுத்தும், நான்கு தசாப்தங்களுக்கு மேலாக, வன்முறையின்றி அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு வரையறைக்குள் அமைந்த போராட்டம் பயனற்றதென நிரூபிக்கப்பட்டு,
முரண்பாட்டை அமைதி வழியில் தீர்ப்பதற்கான மார்க்கங்கள் இல்லாது போன பின்னர்தான், ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும் தமிழரது சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாகவுமே தமிழரது ஆயுதப் போராட்டம் தொடங்கியது என்பதை மனதில் நிறுத்தியும், முதலில் டிசெம்பர் 2000 இலும் பின்னர் டிசெம்பர் 2001 இலும் ஒரு தலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்தி, நெடுஞ்சாலைகளைத் திறந்து, வர்த்தகத்திற்கும் மக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கும் அனுசரணை வழங்கி, இயல்புநிலை திரும்புவதற்கான ஓர் உகந்த சூழலையும் முரண்பாட்டிற்கு ஒரு நீதியான தீர்வையும் காணும் நம்பிக்கையோடு சமாதானப் பேச்சுக்களுக்குள் நேர்மையாக இறங்கி,
சமாதானம் நோக்கிய நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகளே முதலில் முன்னெடுத்தார்கள் என்பதை மீள நினைவுபடுத்தியும், 2001 போர்நிறுத்த அறிவிப்பிற்கு மதிப்பளித்து தற்போதைய இலங்கை அரசு தானும் ஒரு போர்நிறுத்தத்தை அறிவித்ததிலுள்ள அரசியல் துணிவைக் கவனத்திற்கொண்டு, இலங்கைத் தீவிலுள்ள வடக்குக் கிழக்குப் பகுதியின் சமூக, பொருளாதார, நிர்வாக மற்றும் பௌதிகக் கட்டுமானங்களுக்கு அழிவை விளைவித்த போர், வடக்குக் கிழக்கிற்கே பிரதானமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததோடு, வடக்குக் கிழக்கே இலங்கைத் தீவில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகத் தொடர்ந்தும் இருக்கிறது என்பதையும் உணர்ந்து,
2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், வடக்குக் கிழக்கிலுள்ள பெரும்பான்மையான தமிழ்மக்கள் தமது செயல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தங்கள் அதிகார பூர்வமான பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டே தங்கள் வாக்கை வழங்கினார்கள் என்பதை இனம் கண்டு, இலங்கைத் தீவிலுள்ள வடக்குக் கிழக்கின் பெரும்பான்மையான பகுதி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டையும் நியாயாதிக்கத்தையும் செயற்றிறன் வாய்ந்த முறையில் செயற்படுத்துகின்றமையைக் கருத்திற்கொண்டு,
பேச்சு மூலமான ஓர் இறுதித் தீர்வை அடைவதும் அதனை அமுல்படுத்துவதும் ஒரு நீண்ட காலமெடுக்கும் கருமமாக அமையலாம் என்பதை உணர்ந்து, அனைத்து அகதிகளும் இடம்பெயர்ந்த நபர்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திரும்பிச்செல்வதற்கான அவசியத்தையும், அவர்கள் வடக்குக் கிழக்கிலுள்ள தங்கள் வீடுகளுக்குத் தங்கு தடையின்றிச் சென்று, தரையிலும் கடலிலும் தமது வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான அவர்களது உடனடித் தேவையையும் வலியுறுத்தி,
இலங்கை அரச நிறுவனங்களும் அவை வழங்குகின்ற சேவைகளும் வடக்குக் கிழக்கு மக்களது உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானவையல்ல என உணரப்பட் டுள்ளமையை மனதிற்கொண்டு, அமைதிப் பேச்சுக்களின் போது அமைக்கப்பட்ட அவசர மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான உப குழுவும் (சிரான்) ஏனைய உபகுழுக்களும் தோல்வியுற்றமையையும் மீண்டும் மீண்டும் செயலற்ற நிலைக்கு இட்டுச்சென்ற இந்த உப குழுக்களது அமைப்பு முறையே அந்தத் தோல்விக்குக் காரணம் என்பதையும் இனங்கண்டு,
இலங்கை அரசு தனது 2000ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞா பனத்தில் குறிப்பிட்டவாறு, ஓர் இடைக்கால அதிகாரசபைக்கான தேவையை அங்கீகரித்துள்ளமைக்கு மதிப்பளித்து, சட்டம், ஒழுங்கைப் பேணுவது ஒரு நீதியானதும் சுயாதீனமுமான சமூகத்திற்கு இன்றியமையாத அம்சம் என்பதை உணர்ந்து, போரினால் சிதைக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மற்றும் எந்தவோர் ஆட்சியியல் செயற்பாட்டை அங்கு மேற்கொள்வதற்கும் வருமானம் ஈட்ட வேண்டியது தேவை என்பதை இனம்கண்டு,
மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி என்பனவற்றிற்கு, நிலத்தின் மீதான கட்டுப்பாடு முக்கியம் என்பதை இனம்கண்டு, 1972 ஆம், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்களது உருவாக்கத்தில் தமிழ்மக்கள் பங்குபற்றவில்லை என்பதையும் அவை பாகுபாடான ஆட்சியியலை நிறுவனமயப்படுத்தி, தீர்மானம் எடுக்கும் செயல்முறையில் காத்திரமான பங்கினைத் தமிழ்மக்களுக்கு வழங்க மறுத்ததையும் மனதிற்கொண்டு,
கடந்த தசாப்தத்தில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தீர்க்க புதுமையானதும் பரந்த சிந்தனையுடனுமான நடைமுறைகளுடே சமத்துவத்தின் அடிப்படையில் முரண்பட்ட தரப்புக்களுக்கிடையே உடன்படிக்கையினை ஏற்படுத்துவதன் மூலமாக சர்வதேச மட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வழக்கத்தைக் கவனத்திற்கொண்டு, போரிடும் தரப்புக்களுக்கிடையே சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தோடு எட்டப்படும் ஒப்பந்தங்களில் அல்லது உடன்படிக்கைகளில் மாத்திரமிருந்தே பெறப்படும் சட்டாPதியான பலத்தைக் கொண்டு போரினால் சிதைந்த நாடுகளில் இடைக்கால அரசாங்க ஒழுங்குகளை நிறுவுவதற் கான முன்னுதாரணங்களில் நம்பிக்கைகொண்டும், இலங்கைக் கண்காணிப்புக் குழுவின் (SLMM) பணியை உள்ளடக்கிய போர்நிறுத்த ஒப்பந்தம், ளுஐர்சுN மற்றும் வடக்குக் கிழக்கு மீள்கட்டுமான நிதியம் (NERF) அமைக்கப்பட்டமை போன்ற நடைமுறைகள் இத்தகைய ஒழுங்குகளை ஏற்படுத்துவதற்குரிய பெறுமதியான முன்னுதாரணங்களாக அமைகின்றன என்பதைக் கவனத்திற்கொண்டு, மேலே கூறப்பட்டனவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்புக்களான தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் கீழ்வரும் ஏற்பாடுகளுக்கு இத்தால் இணங்குகின்றன.
1. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை
பேச்சு மூலமான இறுதித்தீர்வு எட்டப்பட்டு அமுல்படுத்தப்படும் வரை, வடக்குக் கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கி ஓர் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை (Interim Self- Goberning Authority ISGA) நிறுவப்படும்.
ஐளுபுயு இல் முஸ்லிம் சமூகத்தினது பங்கை உருவாக்கம் செய்வதில் கலந்துகொள்வதற்கு அவர்களது பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு.
2. ISGA இன் அங்கத்துவ அமைப்பு
2.1 இந்த உடன்படிக்கையில் சம்பந்தப்படுகின்ற தரப்புக் களால் தீர்மானிக்கப்படும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களை ISGA கொண்டிருக்கும்.
2.2 ISGA இன் அங்கத்துவ அமைப்பு கீழ்வருமாறு அமையும்.
2.2.a தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள்.
2.2.b இலங்கை அரசால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள், மற்றும்
2.2.c வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் சமூகத்தால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள்.
2.3 கீழ்வருவனவற்றை உறுதி செய்யக்கூடிய விதத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
2.3.a ISGA இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நியமனதாரிகளே அறுதிப் பெரும்பான்மையினராக இருப்பர்.
2.3.b மேலுள்ள உப விதி
(a) இற்கு பங்கம் ஏற்படாத வகையில் வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் ISGA இல் பிரதி நிதித்துவத்தைக் கொண்டிருக்கும்.
2.4 தலைவர் (Chairperson) ISGA இலுள்ள பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு ISGA இன் பிரதான நிறைவேற்று அதிகாரியாகச் செயற்படுவார். 2.5 வடக்குக் கிழக்கிற்கான பிரதான செயலாட்சியரையும் அவரது கடமைகளை ஆற்றுவதில் உதவுவதற்கு தேவைப்படக்கூடிய ஏனைய அதிகாரிகளையும் தலைவர் நியமிப்பார். இந்த நியமனம் ஏதேனையும் இடை நிறுத்துவதற்கு அல்லது முடிவுக்குக் கொண்டு வரு வதற்கான அதிகாரங்களையும் தலைவர் கொண்டிருப்பார்.
3. தேர்தல்கள்
சரத்துக்கள் 2.2 மற்றும் 2.3 இன் ஏற்பாடுகள்,
ISGA இற்கான தேர்தல்கள் நடத்தப்படும் வரை தொடரும், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து ஐந்தாண்டின் முடிவில் இறு தித் தீர்வு எதுவும் எட்டப்படாமலும் அமுல்படுத்தப்படாமலும் விட்டால் இந்த ஐந்தாண்டு காலப்பகுதி முடிவடைகையில் தேர்தல்கள் நடத்தப்படும்.
ISGA ஆல் நியமிக்கப்படும் ஒரு சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு, சுதந்திரமானதும் நேரடியானதுமான தேர்தல்களை சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் சர்வதேச ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் நியமங்களுக்கு அமைவாக நடத்தும்.
4. மனித உரிமைகள்
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளவாறு அனைத்து உரிமைகளும் வடக்குக் கிழக்கிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும். ISGA இயற்றும் சட்டம், ஒழுங்கு முறை, தீர்ப்பு, கட்டளை, தீர்மானம் எல்லாம் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கென சர்வதேசாPதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.
ISGA ஆல் நியமிக்கப்படும் ஒரு சுயாதீனமான ஆணைக்குழு இந்த மனித உரிமைகளுக்கான கடப்பாடுகள் எல்லாம் பேணப்படுவதை உறுதி செய்யும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு காத்திரமான ஒழுங்கமைப்பை நிறுவுவதற்கு இந்த ஆணைக்குழு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் உதவியை நாடும். இந்த ஆணைக்குழு எந்தவொரு தனிநபரிடமிருந்தும் முறைப்பாடுகளை ஏற்று விசாரணை செய்து, பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் வழங்க வேண்டிய நட்டஈட்டைப் பரிந்துரைத்து, அந்த நபரின் உரிமைகள் மீளநிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்யும்.
5. மதச்சார்பின்மை
வடக்குக் கிழக்கில் எந்தவொரு மதத்திற்கும் விசேட இடம் வழங்கப்படமாட்டாது.
6. பாகுபாட்டிற்கெதிரான தடை
வடக்குக் கிழக்கில் மதம், இனம், சாதி, தேசியம் அல்லது பிராந்தியம், வயது அல்லது ஆண், பெண் என்பவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாதிருப்பதை ISGA உறுதிசெய்யும்.
7. இலஞ்ச ஊழலைத் தடுத்தல்
ISGA தனது நிர்வாகத்தில் அல்லது தனது நிர்வாகத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் எதுவும் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யும்.
8. அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்பு
கலாசாரம் அல்லது மதம் தொடர்பாக, ஒரு சமூகத்திற்கு வழங்காத தனிச்சலுகைகளை அல்லது அவர்கள் மீது திணிக்காத அசௌகரியங்களை இன்னொரு சமூகத்திற்கு வழங்கும் அல்லது திணிக்கும் சட்டம், ஒழுங்குமுறை, விதி, கட்டளை அல்லது தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது.
9. ISGA இன் நியாயாதிக்கம்
9.1 மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் தற்போதுள்ள சேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்தி உயர்த்துதல் உள்ளடங்கலான அபிவிருத்தி (இதன் பின்னால் சுசுசுனு எனக் குறிப்பிடப்படுகின்றது), வரி விதித்தல் உள்ளடங்கலான வருவாய் ஈட்டல், வருமானம், தீர்வையும் சுங்கவரியும், சட்;டமும் ஒழுங்கும் மற்றும் காணி தொடர்பான அதிகாரங்கள் உள்ளடங்கலாக வடக்குக் கிழக்கை ஆளுகை செய்வதற்கு வேண்டிய அனைத்து அதிகாரங்களையும் ISGA கொண்டிருக்கும்.
இந்த அதிகாரங்களுக்குள், வடக்குக் கிழக்கிலும் வடக்குக் கிழக்கிற்காகவும் பிராந்திய நிர்வாகம் தொடர்பாக இலங்கை அரசால் செயற்படுத்தப்படும் அனைத்து அதிகாரங்களும் செயற்பாடுகளும் உள்ளடங்கும்.
9.2 இவ்வாறான அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கும் செயற்பாடுகளைச் செயற்படுத்துவதற்குமான விரிவான வழிமுறைகள் இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் மேலும் பேசி முடிவெடுக்கப்படும்.
10. அதிகாரங்களை வகைபிரித்தல்
வடக்குக் கிழக்கில் நீதியை நிர்வகிப்பதற்கான தனியான அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்புகளுக்கு நீதி அதிகாரங்கள் உரித்தாக்கப்படும். நீதிபதிகளது சுயாதீனத்தை உறுதி செய்வதற்கு ISGA பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் சரத்து 4 (மனித உரிமைகள்) மற்றும் 22 இற்கு (பிணக்குத் தீர்த்தல்) பங்கம் ஏற்படாதவாறு, இந்த சரத்தின் கீழ் உருவாக்கப்படும் அமைப்புக்களே, இந்த உடன் படிக்கையை அர்த்தப்படுத்தி அமுல்படுத்துவதில் எழும் அனைத்துப் பிணக்குகளையும், இந்த உடன்படிக்கையில் அல்லது இந்த உடன்படிக்கையின் கீழ் அல்லது இந்த உடன்படிக்கையின் ஏதேனும் ஏற்பாட்டில் எழும் ஏதேனும் பிணக்குகளையும் தீர்ப்பதற்கு தனியானதும் தனித்துவமானதுமான நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும்.
11. நிதி
ISGA இ ஒரு வருடாந்த வரவு – செலவு அறிக்கையைத் தயாரிக்கும்.
ISGA ஆல் நியமிக்கப்படும் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு நிதி ஆணைக்குழு அமைக்கப்படும். இந்த அங்கத்தவர்கள் நிதி, நிர்வாகம் அல்லது வாணிபம் போன்ற துறைகளில் உயர்பதவி வகித்தவர்களாகவோ அல்லது இத்துறைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்கள் என இனம்காணப்பட்டவர்களாகவோ இருக்க வேண்டும். இலங்கை அரசின் ஒன்று திரட்டிய நிதியத்திலிருந்து (Consolidated fund) வடக்குக் கிழக்கிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவை இந்த ஆணைக் குழு பரிந்துரைக்கும். இப்பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசு தனது நல்லெண்ண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சமவிகிதத்தில் பகிர்ந்தளிப்பதற்கு உரிய கவனம் செலுத்தி, ISGA தன்வசமுள்ள நிதிகளை எப்படிப் பயன்படுத்துவதெனத் தீர்மானிக்கும். ISGA வசமுள்ள நிதிகளுள் வடக்குக் கிழக்குப் பொதுநிதியம், வடக்குக் கிழக்கு மீள்கட்டுமான நிதியம், விசேட நிதியம் ஆகியன உள்ளடங்கியிருக்கும்.
வடக்குக் கிழக்கில் அல்லது வடக்குக் கிழக்கிற்காக இலங்கை அரசு செய்யும் அனைத்துச் செலவுகளும் ISGA இன் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறது.
11.1 வடக்குக் கிழக்குப் பொதுநிதியம்
வடக்கு – கிழக்கு பொதுநிதியம் ISGA இன் கட்டுப் பாட்டின் கீழ் இருப்பதோடு பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும்.
11.1.a இலங்கை அரசு ஏதேனும் குறித்த நோக்கங்களுக்காக வழங்கும் அனைத்து உதவிகளிலிருந்தும் கடன்களிலிருந்தும் கிடைக்கும் பணம் மற்றும் ISGA இற்கு வழங்கப்படும் ஏனைய பிறகடன்கள் மூலம் பெறப்படும் பணம்.
11.1.b அரசுகளுடனோ, நிறுவனங்களுடனோ, ஏனைய அமைப்புக்களுடனோ ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் வடக்குக் கிழக்கிற்கென சிறிலங்கா அரசினால் குறித்தொதுக்கப்படும் நிதிகள்.
11.1.c கீழே குறிப்பிடப்படும் நிதியங்கள் தவிர்ந்த, ISGA இற்கு கிடைக்கும் ஏனைய வரவுகள்.
11.2 வடக்குக் கிழக்கு மீள்கட்டுமான நிதியம்.
Nநுசுகு அமைப்பு, கட்டுப்பாடு ISGA இற்கு மாற்றப் படுவது தவிர, ஏனைய அம்சங்களில் அதன் தற்போதைய வடிவத்திலேயே தொடர்ந்தும் இருக்கும்.
வடக்குக் கிழக்கு மீள்கட்டுமானத்திற்காகக் கொடுக்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் Nநுசுகு இற் கூடாகப் பெறப்படும். Nநுசுகு நிதியத்திலிருந்து பெறப்படும் வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக ISGA நேரடியாக முடிவுகளை எடுத்துக் கண்காணிக்கும்.
11.3 விசேட நிதியம்
மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிற்கென்றேவரும் கடன்களும் கொடுப்பனவுகளும், Nநுசுகு நிதியத்தினு}டாக உள்வரமுடியாதவிடத்து, இந்த விசேட நிதியத்திற்குள் உள்வாங்கப்படும். ஏனைய நிதியங்களைப் போலவே இந்த விசேட நிதியமும் ISGA இன் கட்டுப்பாட்டில் இருக்கும்.
12. கடன் பெறுவதற்கும் உதவிபெறுவதற்கும் வர்த்தகத் திற்குமான அதிகாரங்கள்
உள்ளுரிலும் வெளியூரிலும் கடன்பெறுதல், உத்தரவாதங் களையும் இழப்பீடுகளையும் வழங்குதல், நேரடியாக உதவிகளைப் பெறுதல், உள்ளுர் மற்றும் வெளியூர் வர்த்தகத்தில் ஈடுபடுதல் அல்லது அதனை ஒழுங்கமைத்தல் போன்றனவற்றிற்கான அதிகாரங்களை ISGA கொண்டிருக்கும்.
13. நிதிக் கணக்கீடும் கணக்காய்வும்
13.1 ISGA ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கும்.
13.2 இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிதியங்களும் சர்வதேச hPதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்களுக்கு அமைவாகச் செயற்படுத்தப்பட்டு, பேணப்பட்டு, கணக்கீடு செய்யப்படும். இந்தக் கணக்குகள் கணக்காய் வாளர் நாயகத்தால் ஆய்வு செய்யப்படும். சர்வதேச மூலங்களிலிருந்து பெறப்படும் அனைத்து நிதிகளது கணக்காய்வும், ISGA ஆல் நியமிக்கப்படும் சர்வதேசப் புகழ்பெற்ற நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
14. மாவட்டக் குழுக்கள்
14.1 தனது சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங் களைக் காத்திரமாகச் செயற்படுத்துகையில், மாவட் டங்களில் நிர்வாகத்தினை மேற்கொள்வதற்காக ISGA, மாவட்டக்குழுக்களை உருவாக்கி, இந்தக் குழுக்களுக்கு தான் தீர்மானிக்கின்ற அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கலாம். ISGA இற்கும் குழுக் களுக்கும் இடையிலான ஓர் இணைப்பாளராகச் சேவையாற்றக்கூடியவாறு ISGA இன் உறுப்பினர்கள் மத்தியிலிருந்து ISGA ஆல் இந்தக் குழுக்களது தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
14.2 குழுவின் ஏனைய உறுப்பினர்களும் ISGA ஆல் நியமிக்கப்படுவதோடு இந்த நியமனங்கள் எதனையும் இடைநிறுத்துவதற்கு அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களையும் ISGA கொண்டிருக்கும். இந்த உறுப்பினர்களை நியமிக்கையில், அனைத்து சமூகங்களதும் பிரதிநிதித்து வத்தை உறுதி செய்வதற்கு உரிய கவனம் செலுத்தப்படும்.
14.3 இந்தக் குழுக்கள் ISGA இன் கீழ் நேரடியாகச் செயற்படும்.
14.4 ISGA இன் பிரதான செயலாட்சியாளர் மாவட்டங்களில் பிரதான நிறைவேற்று அதிகாரிகளை நியமிப்பதோடு, இந்தப் பிரதான நிறைவேற்று அதிகாரிகள், குழுக்களுக்குச் செயலாளர்களாகவும் செயற்படுவார்கள். இந்த நியமனங்கள் எதனையும் இடைநிறுத்துவதற்கு அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களைப் பிரதான செயலாட்சியாளர் கொண்டிருப்பார்.
14.5 குழுக்களது அனைத்து நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அந்தந்தக் குழுக்களது செயலாளர்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்படும்.
14.6 நிர்வாகத்திற்கு உதவியாக இருப்பதற்காக உபகுழுக்களும் நியமிக்கப்படலாம்.
15. நிர்வாகம்
தனது நிறைவேற்று அதிகாரங்களைச் செயற்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தின் சரத்து 9 இல் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களுடன் தொடர்புபட்ட வடக்குக் கிழக்கி லுள்ள அனைத்து நிர்வாக அமைப்புக்களும் ஆளணியும் ISGA இன் கட்டுப்பாட்டிலும் நெறிப்படுத்தலின் கீழும் அமையும்.
ISGA தற்றுணிவுடன், தேவையான துறைகளில் நிபுணர்களது ஆலோசனைக் குழுக்களை உருவாக்கலாம். இந்த ஆலோசனைக் குழுக்கள் பொருளாதார விவகாரங்கள், நிதி விவகாரங்கள், நீதி விவகாரங்கள், மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு விவகாரங்கள், அடிப்படை கட்டுமானங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆகியனவற்றிற்கும் இவற்றிற்கென மட்டுப்படுத்தப்படாமல் இன்னும் தேவையான துறைகளுக்கும் அமைக்கப்படலாம்.
16. காணி நிர்வாகம்
சரத்து 9 இல் (ISGA இன் நியாயாதிக்கம்) குறிப்பிடப்பட் டுள்ள அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்குக் காணி முக்கியம் என்பதால், வடக்குக் கிழக்கிலுள்ள தனியாருக்குச் சொந்தமானவை தவிர்ந்த எல்லாக்காணிகளையும் பகிர்ந்தளிப்பதற்கும் மற்றும் பொருத்தமான தேவைகளுக்குப் பயன்படுத்துவதைத் தீர்மானிப்பதற்குமான அதிகாரத்தை ISGA கொண்டிருக்கும்.
காணிகளிலிருந்து விரட்டப்பட்ட மக்களது காணிகளின் உரிமை, அத்துமீறிக் குடியேறியோர் வசிக்கும் காணிகளின் உரிமை போன்றவற்றை காலம் எவ்வளவு கடந்திருந்தாலும் கூட விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென காணி நிர்வாகம் தொடர்பான ஒரு விசேட ஆணைக்குழுவை ISGA நியமிக்கும். விசேட ஆணைக்குழு செயற்படுகின்ற கால வரையறையை ISGA தீர்மானிக்கும்.
17. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் மீள்குடியமர்வு
இலங்கை அரசின் ஆயுதப் படைகளால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் இத்தகைய காணிகளுக்கு உரித்துடைய பொதுமக்கள் தங்குதடையின்றிச் செல்வதற்கான உரிமையை மறுப்பதும் சர்வதேச சட்ட நியமங்களை மீறும் செயலாகும். இந்தக் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமை முன்னைய உரித்தாளர்களுக்கு மீளளிக் கப்படவேண்டும். சொந்தக்காரர்களிடம் இருந்து அவர்களது காணிகளைக் கடந்த காலங்களில் பறித்துவைத்திருந்தமைக்காக, இலங்கை அரசு அவர்களுக்குக் கட்டாயம் நட்டஈடு செலுத்தவேண்டும்.
இந்தக் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களையும் அகதி களையும் மீளக்குடியமர்த்திப் புனர்வாழ்வு அளிப்பதற்கு ISGA பொறுப்பாக இருக்கும்.
18. கடல் மற்றும் கரையோர வளங்கள்
வடக்குக் கிழக்கு நிலப் பிரதேசத்தை அண்டிய கடல் மற்றும் கரையோர வளங்கள் மீது ISGA கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதோடு இந்த வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகத் தேவைப்படும் கட்டுப்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கான அதிகாரங் களையும் கொண்டிருக்கும்.
19. இயற்கை வளங்கள்
வடக்குக் கிழக்கிலுள்ள இயற்கை வளங்கள் மீது ISGA கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்.
அத்தகைய இயற்கை வளங்கள் தொடர்பாக ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். அத்தகைய ஒப்பந்தங்களின் கீழ் வரவேண்டிய பணம் அனைத்தும் ISGA இற்கு செலுத்தப்படு வதை இலங்கை அரசு உறுதிசெய்யும். நடைமுறையிலிருக்கும் அத்தகைய ஒப்பந்தங்களில் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் யாவும் ISGA இன் சம்மதத்துடனேயே செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவற்றிற்கான ஒப்பந்தங்கள் ISGA உடன் செய்யப்படவேண்டும்.
20. நீர்ப்பயன்பாடு
ஆறுகளின் கீழ்ப்பகுதியில் நீர்பெறுவோருக்கு நீPதியாகவும் நியாயமாகவும் சம அளவிலும் நீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு ஆறுகளின் தோற்றுவாய்ப்பகுதிகளில் நீர் பெறுவோருக்கு உண்டு. இலங்கை அரசும் ISGA உம் நீர்வளப் பாவனையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கோட்பாடு பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
21. ஒப்பந்தங்களும் குத்தகைகளும்
ISGA இன் நியாயாதிக்கத்தின் கீழ்வரும் விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் எய்தப்படும் ஒப்பந்தங்கள் அனைத் தும் ISGA உடன் மேற்கொள்ளப்படவேண்டும். நடைமுறையிலிருக்கும் ஒப்பந்தங்கள் அப்படியே தொடரும். ஆனால், இந்த ஒப்பந்தங்களின் கீழ் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் ISGA இற்கு கொடுக்கப்படுவதை இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்களில் ஏதேனும் மாற்றம் செய்வதாயின் ISGA இன் சம்மதத்துடனேயே மேற்கொள்ளப்படவேண்டும்.
22. பிணக்குத் தீர்த்தல்
இந்த ஒப்பந்த சரத்துகளுக்கு அர்த்தம் கற்பிப்பதிலோ, நடை முறைப்படுத்துவதிலோ இருதரப்பினரிடையேயும் பிணக்கு ஏதேனும் ஏற்பட்டு அப்பிணக்கு நோர்வே அரசின் நல்லிணக்கம் உட்பட இருதரப்பினருக்கும் ஏற்புடைத்தான வேறு ஏதாவது வழியில் தீர்க்கப்படமுடியாவிட்டால் மூன்று அங்கத்தவர்கள் – இதில் இருவர், தரப்பிற்கு ஒருவர் என்ற ரீதியில் இரு தரப்பினராலும் நியமிக்கப்படுவர் – கொண்ட ஓர் இணக்கமன்றின் முன் விசாரிக்கப்படும். இரு தரப்பினராலும் கூட்டாக நியமிக்கப்படும் மூன்றாவது அங்கத்தவர் மன்றின் தலைவராகச் செயற்படுவார்.
தலைவர் நியமனத்தில் ஏதேனும் கருத்துவேறுபாடு ஏற்படுமிடத்து, மன்றின் தலைவரை நியமிக்குமாறு சர்வதேச நீதிமன்றின் தலைவரை (President of the International Court of Justice) இரு தரப்பினரும் கோருவர்.
எந்தவொரு தகராறு பற்றியும் தீர்மானமெடுக்கையில், பிணக்குத் தீர்ப்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளதும் இலங்கை அரசினதும் சமத்துவமான நிலையை உறுதிசெய்வதோடு இந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளை மாத்திரமே உசாத்துணையாகக் கொண்டு பிணக்குகளைத் தீர்ப்பர்.
பிணக்குத் தீர்ப்பவர்களது தீர்மானம் இறுதியானதாகவும் முடிவானதாகவும் இருப்பதோடு பிணக்கில் சம்பந்தப்பட்ட தரப்புக்களையும் கட்டுப்படுத்தும்.
23. செயற்படும் காலம்
பேச்சு மூலமான நிரந்தரத் தீர்வொன்றின் விளைவாக வடக்குக் கிழக்கிற்கென ஒரு புதிய அரசு நிறுவப்படும் வரை இந்த ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையிலிருக்கும். அத்தகைய ஒரு தீர்வை எவ்வளவு விரைவாக அடைய முடியுமோ அவ்வளவு விரைவாக அடைவதற்கு இருதரப்பும் நல்லெண்ணத்துடன் பேச்சில் ஈடுபடும்.
இருப்பினும் கூட இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையே நான்கு வருடங்களின் முடிவில் இறுதி உடன் படிக்கை எதுவும் எட்டப்படாவிட்டால் ஒப்பந்தத்தின் வீதிகளை மேலும் அதிகரித்து தெளிவுபடுத்தி வலுப்படுத்தும் நோக்கத்தில் இரு தரப்பும் நல்லெண்ணத்தோடு பேச்சுக்களில் ஈடுபடும்.