Breaking News

காலிமுகத்திடல் போராட்டம் – பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து நீதிபதி விலகல்!



ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து கொழும்பு நீதவான் ஹர்ஷன கெகுனாவல விலகியுள்ளார்.

கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த போராட்டம் தொடர்பாக 102 வழக்குகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம தெரிவித்தார்.

எனவே, கோரிக்கையை பரிசீலிக்கத் தயாராக இருந்தால், அதுதொடர்பான உண்மைகளை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாக அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அரச சட்டத்தரணி முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல, குறித்த கோரிக்கையை மீளப்பெற்று வேறு நீதவானிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.