Breaking News

யாழ் மாவட்ட செயலகம் முன் அரச ஊழியருக்கு வாள் வெட்டு!

யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஒருவர் மீது இன்று காலை வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று காலை (08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

சம்பவத்தில் காயமடைந்த உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

இன்று காலை தேசிய கீதம் இசைப்பதற்கு சற்று முன்னர் அலுவலகத்திற்கு வந்த உத்தியோகத்தர் மாவட்ட செயலக நுழைவாயில் நின்றிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரில் இருவர் உத்தியோகத்தரை வாளால் வெட்டியுள்ளனர். 

பின்னர், உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் என நினைத்து வேறு ஒரு நபரின் மோட்டார் சைக்கிளை வெட்டி சேதப்படுத்தியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை, சந்தேகநபர்களில் ஒருவர் அவரது பணப்பையை சம்பவ இடத்தில் தவறவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.