Breaking News

"இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது" - பிரதமர் நரேந்திர மோடி!

இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் லடாக் பிராந்தியத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகளுக்கு இடையிலான கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டிருப்பது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். 

"நமது ராணுவ வீரர்களின் தியாகம் வீணாகாது. நமக்கு ஒற்றுமையும் நாட்டின் இறையாண்மையும் மிகவும் முக்கியம். இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் இந்தியாவை தூண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது" என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். 

இந்த கைகலப்பில் சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

இன்று மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் கொரோனா தொற்று சூழல் குறித்து காணொளி காட்சி மூலம் நடைபெற்று வரும் கலந்துரையாடலின்போது பிரதமர் மோதி இதனை தெரிவித்தார். மேலும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.