Breaking News

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் ஒன்றுகூடுவதற்கு 14 நாட்களுக்கு தடை!

பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் கோவிலில் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய வகையில் முகக்கவசமின்றியும், சமூக இடைவெளியைப் பேணாமலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பூசைகள் இடம்பெற்ற போது காய்ச்சல்

அறிகுறிகளுடைய ஒருவரும் இணைந்து சுவாமி தூக்குவதில் ஈடுபட்டமையால் மிகநெருக்கமாக இருந்வர்கள் தனிமைப்படுத்தப்பட்டதோடு வழமையான பூசைகள் பாதிக்காதவகையில் பிரதம குரு உட்பட ஐவரைத் தவிர ஏனைய மக்கள் ஒன்றுகூடுவதை 14 நாட்கள் தடைசெய்யுமாறு பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையால் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்திற்கமைவாக பணிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டிடங்களில் ஐம்பது பேருக்கு மேல் ஒன்று கூடாத வகையிலும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பேணியும், கைகழுவுதலுக்கு உட்பட்டும் வழிபாடுகளை அவதானமாக நடத்த வேண்டுமென அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதும் இதனை மீறும் வகையில் பலநூற்றுக்கணக்கான மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வல்லிபுர ஆழ்வார் கோயிலில் ஒன்றுகூடியிருந்தனர்.

இதுசம்பந்தமாக பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரிபணிமனைக்கு பல முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாகக் கிடைக்கப்பெற்றுவந்தது.இதுகுறித்து கடந்தவாரமும் பொதுசுகாதாரபரிசோதகர்கள் குழுவாகச் சென்று கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருந்தனர்.
எனவே, நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குழுப்பரிசோதனைகளுக்காக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அங்கு சென்றிருந்தனர். எனினும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவௌி பேணாமலும் வழிபாடுகள் இடம்பெற்றன.

முகக்கவசத்தை அணியுமாறும் சமூக இடைவௌியைப் பேணுமாறும் மீண்டும் வலியுறுத்தியும் அதனை மக்கள் கேட்காமலும் நிர்வாகத்தினர் நடைமுறைப்படுத்த முன்வராமையும் காணப்பட்டதோடு காய்ச்சலுடன் சுவாமி காவுவதில் ஒருவர் இணைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே மக்களைப்பாதுகாக்க சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்படி கட்டளையை விடுத்துள்ளது.