குற்றமிழைத்தவா் ஆளுநரே - முதலமைச்சா் சி.வி.!
முதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி நீக்கும் உரித்து இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும்போது அமைச்சரவையை உருவாக்குவதற்கான ஆலோசனையை நான் எவ்வாறு வழங்குவது?
சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை எடுக்கவைத்து என்னை மாட்டிவிடுவ தற்கு பார்க்கிறார்களா உறுப்பினர்கள். ஆளுநர் செய்த பிழையை அவரே சரிசெய்யவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன்பிழையை வைத்து மாகாண ஆட்சியை கலைக்க முடியும் என்றால் மத்திய அரசாங்கம் அதனைச் செய்தே சகல மாகாணசபைகளையும் கலைத்து விடலாம்.
ஆனால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாண அமைச்சர்கள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது:
கேள்வி: வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா?
பதில்: இல்லை, ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமென்றால் மத்திய அரசாங்கம் அதைச் செய்தே எல்லா மாகாணசபைகளையும் கலைத்துவிடலாம்.
மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில் டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே. வடமாகாணசபை சார்பாக கௌரவ ஆளுநர் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்டு அதை முன்வைத்து வடமாகாணசபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காது. அவைத்தலைவர் தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத்தலைவராகவே இருக்கலாம்!
கேள்வி: முழுமையான அமைச்சரவையை உருவாக்கும் ஆலோசனையை ஆளுநருக்கு வழங்குங்கள் என்று உறுப்பினர்கள் நேற்று தீர்மானம் எடுத்துள்ளார்களே?
பதில்: முதலமைச்சருக்கு நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது நான் எவ்வாறு ஆலோசனை வழங்குவது?
சட்டத்திற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கப்பண்ணி என்னை மாட்டிவிடப் பார்க்கின்றார்களா எமது உறுப்பினர்கள்? ஆளுநர் செய்த பிழையை ஆளுநரே சரி செய்ய வேண்டும்.
டெனீஸ்வரனை நான் பதவிநீக்கம் செய்ததை அரச வர்த்தமானியில் பிரசுரிக்காத குறையை இப்பொழுதும் நீக்கலாம். அதாவது 2017 ஆகஸ்ட் 20 ஆம் திகதி தொடக்கம் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இப்பொழுதும் கடந்த காலத்தை அளாவிய விதத்தில் அரச வர்த்தமானியில் பிரசுரம் இடம்பெற ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம்.
அதன் பின் குறித்த வர்த்தமானி அறிவித்தலை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துக்காட்டி மேன்முறையீட்டுத் தீர்மானத்தைப் புறம் வைக்கலாம்.
கேள்வி:- வடக்கில் இராணுவத்தின் வசம் இருந்த 92 சதவீதமான காணி கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதே? இது உண்மையா?
பதில்:- புளுகு, அண்டப்புளுகு, புள்ளி விபரங்கள் என்று கூறுவார்கள் (Lies, Bloody lies and Statistics). அதுபோல் இவ்விடயம் அமைகின்றது. நாங்கள் பதவிக்கு வந்த போது அதாவது 2013 கடைசியில் வலிகாமம் வடக்கில் சுமார் 6500 ஏக்கர் மக்கள் காணி இராணுவத்தினர் கைவசம் இருந்தது.
இப்பொழுது அவற்றில் வாசி மட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கையளித்துள்ளார்கள். அதை 92 சதவீதம் என்று கூறுவது தாங்கள் 2009இல் கைவசம் வைத்திருந்த காணிகளின் வீதாசார அடிப்படையில் தற்போது 8 சதவீதமே மிகுதி உள்ளதென்பதையே அவர்கள் கூறுகின்றார்கள்.
இது யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் மட்டுமே.
நாம் பதவியேற்ற போது 65000 ஏக்கர் காணிகளை வடமாகாணம் முழுவதிலும் படையினர் கையகப்படுத்தி வைத்திருந்தார்கள்.
அவற்றுள் பெரும்பான்மை அரச காணிகள். அவற்றைப் பற்றி எதுவும் கூறா மல் 92 சதவீதம் கையளித்து விட்டதாகக் கூறுவதன் அர்த்தம் அரச காணி களைத் தாம் தான்தோன்றித்தனமாய் ஆயிரம் வருடங்களுக்கு தொடர்ந்து வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில்.
சுமார் 60000 ஏக்கர் வடமாகாணக் காணிகள் இப்பொழுதும் படையினர் வசம் இருக்கின்றன என்பதே எமக்குத் தரப்பட்ட ஏற்றுக் கொள்ளக்கூடிய புள்ளி விபரங்கள்.
கேள்வி:- படையினர் முதலமைச்சரிடம் அனுமதி கேட்டு வைத்தியசாலைகளில் புள்ளிவிபரங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராணுவத்தினர் கூறுகின்றார்களே?
பதில்:- - இன்னமும் அவசரகால நிலைமை நீடிப்பதாக படையினர் நினைக்கின்றார்கள். அவசரகாலச்சட்டம் இல்லாத தற்காலத்தில் எந்த ஒரு அரச நிறுவனத்தில் சென்று விபரங்கள் சேகரிப்பதென்றாலும் அவை அந் நிறுவனங்களின் தலைமை அதிகாரியின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும்.
தம்பாட்டுக்குப் போய் பாதுகாப்பு என்ற அடிப்படையில் எதுவும் கேட்க முடியாது. அதற்கு சட்டம் இடம்கொடுக்காது. பாதுகாப்பு என்ற போர்வையில் பலவிதமான அட்டூழியங்களைப் படையினர் இது காறும் புரிந்துள்ளார்கள். போர்க்குற்றங்கள் அவற்றுள் அடங்குகின்றன.
எனவே இவ்வாறான தருணங்களில் பாதுகாப்பு படையினரின் முறையற்ற நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியம்.
அத்துடன் போர்முடிந்து 9 வருடங்கள் நிறைவடைந்த பின் பாதுகாப்பு, பாதுகாப்பு என்று பயமுறுத்தும் படையினர் அந்தப் பாதுகாப்புக்கான காரணங்கள் என்ன என்பதை எங்களுடன் பேசி முடிவுக்கு வர வேண்டும்.
வெளிநாடுகளிடமிருந்து எமக்கு பாதுகாப்புத் தேவைப்படுகிறதா உள்நாட்டில் தேவைப்படுகின்றதா என்பதை
அவர்கள் கூற வேண்டும். வெளிநாடுகளைக் குறிப்பிட்டு தேசிய பாதுகாப்பைப் பற்றிக் கூறுவது ஒன்று.
தேசிய பாதுகாப்பு வேண்டுமெனில் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சும்மா பாதுகாப்பு பாதுகாப்பென்று மக்களின் காணிகளைப் பிடித்துக் கொண் டும் வருவாயை எடுத்துக்கொண்டிருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்துடன் இவர்கள் தாம் நினைத்தவாறு வைத்தியசாலையினுள் நுழைந்து தரவுகள் சேகரித்தால் பொலிசாரின் அதிகாரங்களை படையினர் கைவசப்படுத்தியதாக அமையும். உண்மையில் இராணுவத்தினர் இவ்வாறான புள்ளி விபரங்களை வைத்தியசாலைகளில் இருந்து சேகரிக்க வேண்டுமென்றால் பொலிஸாரை நாடி அவர்கள் ஊடாகவே இதைச் செய்ய வேண்டும்.
இராணுவத்தினருக்குப் போர்க்காலம் போல் இப்பொழுதும் அதிகாரங்கள் இருப்பதாக நினைப்பது தவறு. உண்மையில் வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அரசியல் காரணங்களே அவர்களை இங்கு நிலை நிறுத்தியுள்ளன.
கேள்வி:- வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க நீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளாரே? அது பற்றி?
பதில்:- - மகேஷ் எனது நண்பர். அவர் கூறுவது அந்த வரையில் உண்மை. எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வர எத்தனிக்கும்.
அதனால் பாதிப்படையப்போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது.
அப்படி இராணுவம் தரித்து நிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கனவே கூறியுள்ளேன் இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள்! ஒன்பதில் ஒரு பங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள் என்று. சலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே!
எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரண மக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவ வருவது சரிபோல் தெரியும்.
வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவது எமது இன மக்களே. படைகளில் சிலருக்கு தெற்கில் ஒரு குடும்பம் வடக்கில் ஒரு குடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை.
அடுத்து அரசாங்க திணைக்களங்கள் தகவல்கள் இராணுவத்தினருக்கு வழங்கு வது பற்றியும் நண்பர் கூறியிருந்தார். அது பற்றி ஏற்கனவே பதில் கூறி யுள்ளேன். இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தப்போவ தில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவத் தளபதி. அதை நாம் எதிர்பார்ப்பது தான்.
தருணம் வரும் வரையில் தான் இவ்வாறான கருத்துக்கள் தங்கி வாழ முடி யும். தருணம் வந்ததும் விட்டு ஏக வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு இந்திய அமைதிப்படையை வாபஸ் பெற வேண்டியிருந்தது வி.பி. சிங் டில்லியில் பிர தமர் ஆகியதால்!
இங்கிருந்து நாம் எப்பொழுதும் திரும்ப மாட்டோம் என்ற கூற்றுடன்தான் இந் திய அமைதிப் படையினர் வந்தார்கள். ஆகவே தருணங்கள் எப்போது வரு வன என்று எம்மால் கூறமுடியாது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவ தில்லை.