சிறிதரனும் 2 கோடி பெற்றுள்ளார்; ஆதாரப்படுத்தியது தினக்குரல்!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதி
ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இரண்டுகோடி ரூபாவை அபிவிருத்தி நிதி எனும் பெயரில் பெற்றுக்கொண்டமையை தினக்குரல் பத்திரிகை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபா அரசியல் இலஞ்சம் வழங்கப்பட்டதாக தாவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தான் அவ்வாறு நிதி ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என மறுத்திருந்தார்.
இந்நிலையிலேயே தினக்குரல் பத்திரிகை இதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தப் பத்திரிகையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசிடம் இருந்துதான் இரண்டு கோடி ரூபா விசேட நிதி எதனையும் தான் பெற்றுக்கொள்ளவில்லை என சிறீதரன் தொடர்ந்து மறுத்துவந்தார்.
நான் இரண்டு கோடி ரூபா பெற்றதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா எனவும் சிறிதரன் பகிரங்க சவால் விடுத்திருந்தார்.
இந்த நிதி ஒதுக்கீடு தமக்கு கிடைத்ததையும் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்களையும் பெரும்பாலான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் நிதியே பெறவில்லை என்றே சிறீதரன் தொடர்ந்து கூறிவந்தார்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசியத் திட்டமும் கொள்கையும் என்ற அபிவிருத்தித் திட்டம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக செய்தியாளர் ஒருவர் கோரியிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன் இந்த ஒதுக்கீட்டின் கீழ் நிதி பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனை தான் பெறவில்லை என சிறிதரன் முன்னர் தெரிவித்ததோடு இதனை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.