Breaking News

முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு விக்னேஸ்வரனே தடையாம்!

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப் பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்திலுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தடையாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காது தடையாக உள்ளார். எனவே இந்தப் பிரேரணை யின் முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ளுங்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று முன்தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முஸ்லிம் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை நாட்களில் தொழுகைக்குச் செல்லும் முன்னர் அவர்களின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றில் நேற்று தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பிரேரணையும் இருந்தது.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மதிய போசன இடைவேளைக்கு நிறுத்தாது சபை தொடர தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் வெள்ளிக்கிழமை நாளாகையால் தொழுகைக்கு சென்றிருந்தேன்.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான இந்த பிரேரணை முக்கியமானது. வெள்ளிக்கிழமைகளில் தனிநபர் பிரேரணையை விவாதிக்கும்போது முஸ்லிம் உறுப்பினர்களின் பிரேரணையை முற்கூட்டியே எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, இந்த விடயம் தொடர்பில் இனிவரும் காலங்களில் கவனமெடுப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.