Breaking News

குதிரைகளைப் பாதுகாக்க நெடுந்தீவில் ஆய்வுக்குழு

யாழ்ப்பாணத்திற்கு வடக்கே அமைந்துள்ள தீவுகளில் ஒன்றாகிய நெடுந்தீவு திவில் குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார்.

நெடுந்தீவில் நிலவுகின்ற மோசமான வறட்சி காரணமாக, அங்குள்ள குதிரைகள் உயிரிழக்க நேர்ந்துள்ளதையடுத்தே, வடமாகாண சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வண்டுள்ளன. குடிப்பதற்கு நீர் இல்லாமலும், மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் ஆறு குதிரைகள் வரையில் மடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தலைமையிலான இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். நெடுந்தீவுக்கு இன்று வியாழக்கிழமை பயணமாகியுள்ள இந்தக் குழு, அங்கு குதிரைகள் வாழுகின்ற பிரதேசங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டதுடன், நெடுந்தீவு பிரதேச செயலக அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோதுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.






இந்தக்குழு குதிரைகளை அழிவில் இருந்து, பேணி பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அடையாளங்கண்டு, அறிக்கை தயாரிக்கவுள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கைகள் இரண்டு வார காலம் நடைபெறும் எனவும் ஆய்வின் முடிவில் அறிக்கையொன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.