Breaking News

மலையக மக்களை இழிவுப்படுத்தியதால் நிறுத்தப்பட்டது கரை எழில் நூல் விநியோகம்



கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில் 2016 ஆம் ஆண்டு இதழில் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் தமிழ்க்கவி என்பவரின் கட்டுரையும் வெளிவந்துள்ளது.

குறித்த கட்டுரையில் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் மலையக தமிழர்களை மிக மோசமாக இழிவுப்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றார். குறித்த கருத்துக்களுக்கு சமூகத்தில் பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக கடந்த 08-04-2017 அன்று மலையாளபுரம் கிராமத்தில் இடம்பெற்ற காலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட 15 வரையான கரை எழில் நூல்களை தவிர ஏனைய நூல்களின் விநியோகம் நிறுத்தப்பட்டு சர்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளதாக கரைச்சி கலாசார பேரவை தெரிவித்துள்ளது.

குறித்த நூலில் வெளிவந்துள்ள கட்டுரையில் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் மலையக சமூகத்தைசேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அர்த்தத்திலும், மற்றும் விடுதலைப் போராட்டத்தில் மலையக மக்களின் பிள்ளைகள் தேசப்பற்றோடு இணைந்துகொள்ளவில்லை என்றும் மாறாக தங்களுக்கான சமூக அந்தஸ்திற்காகவே இணைந்துகொண்டனர் எனவும் மிக மோசமான கருத்துக்களை எழுதியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.