Breaking News

காணி விடுவிப்பு: கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பேச்சுவார்த்தை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள மக்கள் காணிகள் குறித்து ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கும் படையினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செலயகத்தில் நடைபெற்று வருகிறது.


இன்றைய பேச்சுவார்த்தையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறிதரன், சரவணபவன், இராணுவ உயர் அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள மக்கள் காணிகளை, உரிய மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பில் கடந்த 18ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படைத் தளபதிகளுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மாவட்ட செயலகங்கள் மற்றும் படையினரின் முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.