யாழ். விவகாரத்தை வெறுமனே ஒரு மோதலாக கருத முடியாது
யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணர்கள் மீது தமிழ் மாணவர்கள் குழுவொன்று நடத்திய தாக்குதலானது வடக்கில் வளர்ந்துவரும் இனவாத மனோபாவத்தின் தொடர்ச்சியென எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி தெரிவித்தார்.
அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளவதற்காக இனவாதத்தை தூண்டிவிடுவதற்கும், இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் இலாபமடையும் இனவாதிகளுக்கு உத்வேகமளிப்பதுமாகவே இந்த மோதல் சம்பவம் அமையுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 23இன் கீழ் 2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை சிங்கள தமிழ் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனுரகுமார மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைகக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றபோது சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை காரணமாக சில மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டி ஏற்பட்டிருந்தது.
இது பல்கலைக்கழகமொன்றில் இடம்பெற்ற சாதாரண மோதல் சம்பவமொன்றல்ல. அரசியல் மற்றும் சமூக ரீதியாக பாரதூரமான அபாய எச்சரிக்கையொன்றை ஏற்படுத்தும் வகையில் இரு இனக்குழுக்களை பிரதிநித்துவப்படுத்தும் மாணவர்களிடையே உருவான சம்பவமொன்றென்பதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம் என்ற வகையில் கண்டிக்கத்தக்க மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய இனவாதத்தின் நச்சுத்தன்மையை இந்த சம்பவத்தின் பின்னணியில் காணமுடியும்.
குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மீது தமிழ் மாணவர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது வடக்கில் வளர்ந்து வரும் இனவாத மனோபாவத்தின் தொடர்ச்சியாகும். இந்த நிலைமையானது அனைத்து இனவாதிகளுக்கும் உத்வேகத்தை அளிக்கும். தங்களது அரசியலுக்காகவும் எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் நோக்கத்திற்காகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இனவாதிகளுக்கும் இது உத்வேகமளிப்பதாகவே அமையும்.