வீதித்தடுப்பை உடைத்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகாயம்
மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்த கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, தடுப்புகளை உடைத்துச் செல்ல முயன்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி உறுப்பினர்களான ரோகித அபேகுணவர்த்தன மற்றும் சிறியானி விஜேவிக்கிரம ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுமே காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று நடத்தப்பட்ட இந்தப் பேரணி, மத்திய வங்கி வளாகத்தை அடைவதற்கு காவல்துறையினர் நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றிருந்தனர். இதன்அடிப்படையில் அவர்கள் வீதித்தடுப்புகளை அமைத்திருந்தனர்.
கோட்டே ரீகல் தியேட்டர் பகுதியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி, பழைய நாடாளுமன்ற வீதி வழியாக, திறைசேரி நோக்கி செல்ல முயன்றது. அங்கு காவல்துறையினர் வீதித் தடுப்புகளை அமைத்திருந்தனர்.
அந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பேரணி செல்ல முயன்ற போது, முன்னால் சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்த்தன முகம் குப்புற விழுந்தார். அப்போது, அவரது தலைக்கு மேல், மற்றொரு வீதித்தடுப்பு விழுந்தது.
அதற்குள் அவர் நசிந்து கொண்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரமவின் காலும் அதற்குள் சிக்கிக் கொண்டது. இதனால் இருவரும் காயமடைந்தனர்.
கூட்ட நெரிசலுக்கு மத்தியில், தலையில் காயமடைந்து இரத்தம் வழிந்தோட, நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ரோகித அபே குணவர்த்தன நவலோகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலில் காயமடைந்த சிறியானி விஜேவிக்கிரம கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தினால், பேரணியில் பங்கேற்ற கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ச, பந்துல குணவர்த்தன, தினேஸ் குணவர்த்தன, மகிந்தானந்த அழுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் அதிர்ச்சி அடைந்த நிலையில் காணப்பட்டனர்.