Breaking News

கச்சத்தீவு விவகாரம்: ஜெயா இரட்டை வேடமா?

தமிழக சட்டசபையில் கச்சத்தீவு பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதோடு, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பும் செய்தனர். 

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஜெயலலிதா பதிலளித்து பேசினார். 

அப்போது அவர், "கச்சத்தீவை கொடுத்த பிறகு தான் தனக்கு தெரியும் என கருணாநிதி கூறினார். கச்சத்தீவு தொடர்பாக கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார். கச்சத்தீவு பற்றி சட்டசபையில் பேசாமல், வெளியில் இருந்து பேசுகிறார். கேள்விகளுக்கு பயந்து திமுகவினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்றார். 

இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சில் இடையூறு ஏற்பட்டது. இதனையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் விளக்கம் தரமுற்பட்டனர். அப்போது சபாநாயகர் தனபால், முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சில் இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதாக கூறினார். 

சட்டசபையில் முதல்வர் பேச்சுக்கு விளக்கம் அளிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். 

பின்னர் பேச்சை தொடர்ந்த ஜெயலலிதா, கச்சத்தீவு பிரச்சினையை எடுத்தாலே திமுகவினர் ஓடுவதாக கூறினார். 

கச்சத்தீவு விவகாரத்தில் வழக்குப்போடப் போவதாக வாஜ்பாய் சொல்லியும் கருணாநிதி ஏன் முன் வரவில்லை. கச்சத்தீவு குறித்து பதில் அளிக்க கருணாநிதியை திமுகவினர் சட்டசபைக்கு அழைத்து வர வேண்டும். சட்டசபைக்கு வந்து அவர் விளக்கம் அளிக்கத் தயாரா என்று சவால் விட்ட ஜெயலலிதா, திமுக தலைவர் யார் என்பதில் ஸ்டாலின், கருணாநிதிக்குள் குழப்பம் இருக்கிறது என்றும் கூறினார். 

இந்தநிலையில், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வெளியே, வெளிநடப்பு குறித்து காரணம் தெரிவித்தனர். 

இதன்படி, செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், கச்சத்தீவு விவாகாரத்தில் திட்டமிட்டு கருணாநிதி மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாகவும், ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறுவதால் அந்த பொய் உண்மையாகிவிடாது என்றும் கூறினார். 

மேலும் கச்சத்தீவு பிரச்சினை பற்றி முதல்வர் முரண்பட்ட கருத்து கூறுவதாகவும், இதற்கு பதில் அளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன் கச்சத்தீவு விவகாரத்தில் அதிமுக அரசுக்குத்தான் அக்கறையில்லை என்றும் துரைமுருகன் தெரிவித்தார் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 2003ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தை வாசித்து காட்டினார். 

23-7-2003 அன்று ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நல்லுறவுப் பேணப்படவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகள் காப்பாற்றப்படவும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார். 

மேலும் அந்த கடிதத்தில், ´´கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தர குத்தகைக்குப் பெறலாம், அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்´´ என்று குறிப்பிட்டுள்ளதாக கூறிய துரைமுருகன், கச்சத்தீவு பிரச்சினையில் ஜெயலலிதாவின் நிலையை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளாக கூறினார்.