Breaking News

பிள்ளையானிற்கு தொடரும் சிறை

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக இன்று வெள்ளிக்கிழமை அவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திரமணி ஒத்திவைத்தார்.

இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.