தற்கொலை அங்கி தொடர்பாக மேலும் ஐவர் கைது!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேகநபர்கள் விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலைத் தாக்குதல் அங்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான எட்வர்ட் ஜூலியஸுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறு ஸ்ரீலங்கா பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரும் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி, சாவகச்சேரி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்க்ளப்பட்டுள்ளது.
இவர்கள் 5 பேரும் பிரதான சந்தேக நபருடன் அடிக்கடி தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளமை தொலைபேசி வலையமைப்பு சோதனைகளில் தெரியவந்துள்ளது.இந் நிலையில் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஐவர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான எட்வர்ட் ஜூலியஸ் தொடர்பில் ஸ்ரீலங்கா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்யசர் நாலக சில்வாவின் கீழ் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.