Breaking News

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது, விமல் வீரவன்ச தலைமையிலான குழு கொழும்பு ஹெவ்லொக் பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

அத்துடன் வீதிச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய குற்றமிழைக்கப்பட்டுள்ளதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த முறைப்பாட்டை அடுத்து விமல் வீரவன்ச உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, மொஹமட் முஸம்மில், ரொஜர் செனவிரத்ன, டொன் லிசுயா ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.