தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதை எதிர்ப்போரை கணக்கிலெடுக்க மாட்டோம்! என்கிறார் சம்பிக்க
நாட்டின் ஐக்கியத்தை பலப்படுத்தி நல்லாட்சியை முன்னெடுத்து செல்லும் இந்த அரசாங்கத்தில் ஐக்கியத்தை வெளிப்படுத்தும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவே இந்த சுதந்திரதினம் அமைந்துள்ளது. இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை சமத்துவத்தின் அடையாளம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஒற்றையாட்சியில் சமத்துவ பயணம் பலமடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒரு சாரார் கருத்துக்களை தெரிவித்து வருவது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பலப்படுத்தி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் நாட்டில் மூவின மக்களும் அமைதியாக வாழக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. அதேபோல் சட்ட, நீதி செயற்பாடுகள் சுயாதீனப்படுத்தப்பட்டு மக்கள் நீதி செயற்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படும் வகையில் ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்லாட்சியில் ஊழலும், மோசடிகளும் முழுமையாக அழிக்கப்பட்டு குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல எடுத்துக்காட்டுகள் இந்த ஆட்சியில் நடந்துள்ளன.
அதேபோல் ஊழல், மோசடிகள் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக சிறுபான்மை மக்களை இணைத்துக்கொண்டு ஐக்கிய இலங்கை என்ற நிலையில் செயற்படும் வாய்ப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. அதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இம்முறை சுதந்திரதின வைபவத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையை குறிப்பிடலாம். இந்த செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமான வகையில் மக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
நல்லாட்சியில் மூவின மக்களின் பிரதிநிதித்துவங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே கடந்தகால விமர்சனங்கள், அழுத்தங்கள் அனைத்திற்கும் இந்த சுதந்திரதின நிகழ்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சிலரின் செயற்பாடுகளும் இருந்து வருகின்றன. அதை பற்றிய கவலை எமக்கு இல்லை. நாம் ஐக்கிய இலங்கைக்குள் அனைவருக்குமான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம். அதை ஒருசிலர் குழப்ப நினைக்கின்றனர். ஆனால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதேபோல் ஒற்றையாட்சிக்குள் சமத்துவமான ஒரு பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.