Breaking News

தமிழில் தேசியகீதம் - தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் - என்கிறார் கம்மன்பில

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாகவே கருதப்பட வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

68ம் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். தாய் நாட்டை பிரித்துக் கொள்வதில் மட்டும் இதுவரையில் பிளவடைந்திருந்த இன சமூகங்கள், தற்போது தேசிய கீதம் தொடர்பிலும் பிளவடைந்துள்ளன.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது அரசியல் அமைப்பின் 7ம் சரத்தினை மீறும் செயலாகும்.எனவே, சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைத்ததன் மூலம் ஜனாதிபதி தமக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரக்கூடிய பாரிய குற்றமிழைத்துள்ளார்.

தேசிய கீதம் தேசிய கொடி என்பன தேசிய ஒற்றுமையின் குறியீடுகளாகும். இவ்வாறான ஓர் காரியத்தை செய்ய முன்னர் 1721 மொழிகள் காணப்படும் அண்டை நாடான இந்தியாவை முன்னுதாரணமாக கொண்டிருக்க வேண்டும்.

1721 மொழி பேசும் இந்தியாவில் பெங்காலி மொழியில் தேசிய கீதம் பாடப்படுகின்ற நிலையில், குறுகிய அரசியல் நோக்கில் தூரநோக்கின்றி எடுக்கப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.