Breaking News

“எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்”

கொச்சைத் தமிழில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்

“எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும் ” என கடிதமெழுதிவிட்டு மாணவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவமொன்று பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 14வயது பாடசாலை மாணவன் ஆவார். இந்த சம்பவம் இன்று காலை 08.15 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவனின் தாய் சகோதரியை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளையிலேயே சிறுவன் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஜேசுதாஸ் மில்ரோய் பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த சிறுவன் பொகவந்தலாவை சென். மேரீஸ் மத்திய கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்று வந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் அருகில் இருந்து கடிதம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் அதில் “ எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும் ” என தற்கொலைசெய்து கொண்ட மாணவன் எழுதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சிறுவன் பொகவந்தலாவை கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற மரணவீட்டிற்கு (08.02.2016) நேற்று இரவு சென்று வந்ததாகவும் மாணவனின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.