Breaking News

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - இனவாதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என இனவாதிகளிடம் கோருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை முழு அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனைகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, லக்ஸ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாஸ ராஜபக்ச மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்கள் குழுமத்தின் யோசனையாக முன்னவைக்கப்பட்டன.

இந்தநிலையில் அதன்பின்னர், அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மது நாட்டின் அரசியலமைப்பு, வெளிநாட்டவரின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்படுவதாக இனவாதக்குழுக்கள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. அவ்வாறான, எந்தவொரு தேவைப்பாடும் எமக்கில்லை.

அரசியலமைப்பை மாற்றுகின்றபோது, பெடரல் என்றால் தெற்கைச்சேர்ந்த இனவாதக்குழுகளுக்கு கசக்கின்றது, வடக்கைச்சேர்ந்த இனவாதக்குழுக்களுக்கு ஐக்கியம் என்ற சொல் கசக்கின்றது. இவற்றை நிவர்த்தி செய்யவேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் தான், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதாக பலரும் கூறுகின்றனர். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தில் மற்றுமொரு யுத்தம் எதிர்பார்க்கப்படுகின்றதா? என்பது தெரியவில்லை.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனினும், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி, 19ஆவது திருத்தம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டையும், யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களையும் கண்டறிந்து அவை, எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.