ஒரு சிறைக்கைதி உருவாக்கிய டிஜிட்டல் சிறைச்சாலை!
நீங்கள் செய்யாத ஒரு தவறுக்கு, உங்களை 13
மாதங்கள் சிறையில் அடைத்தால் என்ன செய்வீர்கள்? வெளியில் வந்து ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவது அடுத்தது. சிறை நாட்களின் துயரம் உங்களை எப்படி எல்லாம் அழுத்தியிருக்கும்! ஆனால், அமித் மிஷ்ரா, வேற மாதிரி! தான் சிறையில் இருந்தபோதே, சிறைப் பணிகளை முறைப்படுத்தும் ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கிறார்.
``ஆரம்பத்துல எனக்கு சட்டரீதியாக எந்த உதவியும் கிடைக்கலை. என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கவே மூணு மாசம் ஆச்சு. அப்பத்தான் என்கூட இருந்த பல கைதிகளுக்கும் அவங்க வழக்கைப் பத்தின தகவலே தெரியலைங்கிறதைக் கவனிச்சேன். அதே சமயம், எல்லா கைதிகளைப் பத்தின தகவல்களைத் தொகுக்கிறது, சிறை அதிகாரிகளுக்கும் சிரமமான வேலைனு புரிஞ்சது. என் மேல எந்தத் தப்பும் இல்லைனு நம்பின ஜெயில் அதிகாரி ஒருவர், ‘மனசை வேற பக்கம் திருப்புங்க’னு சொன்னார். ‘நடந்ததையே நினைச்சு அழுதுக்கிட்டு இருக்கிறதைவிட அதுதான் சரி’னு எனக்கும் தோணுச்சு. நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அதனால சிறை நடவடிக்கைகளைக் கவனிச்சு, அதுக்கு ஒரு சாஃப்ட்வேரை உருவாக்க முடிவுபண்ணினேன்” என்கிறார் அமித் மிஷ்ரா.
இவர் உருவாக்கிய மென் பொருளின் பெயர், `ஃபீனிக்ஸ்’. இதன் மூலம், ஒரு கைதி, தான் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளோம், வழக்கின் தற்போதைய நிலை என்ன, நீதிமன்றத்தில் அடுத்த வாய்தா எப்போது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். அதைப் போலவே சிறை அதிகாரிகளும், எந்த கைதி வெளியே செல்கிறார்... உள்ளே வருகிறார் போன்றவற்றை எந்தச் சிக்கலும் இல்லாமல் கண்காணிக்க முடியும்.
“சிறைக்குள் எக்கச்சக்க ஊழல். கைதிகள், தங்களுக்குத் தேவையான பொருட்களை சிறை கேன்டீனில் வாங்கிக்கொள்ளலாம். அதற்காக அவர்களுக்கு கூப்பன்கள் வழங்கப் படும். ஆனால், இந்த கூப்பன்கள் 50, 100 ரூபாய் போன்ற ரவுண்டான தொகைக்கே இருக்கும் என்பதால், தேவைக்கு அதிகமான பொருட் களை வாங்கவேண்டிய சூழல். மேலும், கூப்பன்களை மற்ற கைதிகள் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் உண்டு. இதற்காக `ஃபீனிக்ஸ்’-ல் கைரேகை முறையைச் சேர்த்தோம். கைதிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கைரேகை பதித்து வாங்கிக்கொண்டால், அதற்கான பணம் மட்டும் அவர்கள் கணக்கில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்” - மிக மிகச் சிக்கலான ஒரு விஷயத்துக்கு எளிதான தீர்வு கண்டு அறிந்த மகிழ்ச்சியில் பேசுகிறார் அமித் மிஷ்ரா.
பொதுவாக எல்லா கார்ப்பரேட்களும் அவர்களது நடவடிக்கைகளை ERP (Enterprise resource planning) மூலம்தான் கண்காணிக்கிறார்கள். SAP, Oracle போல பல ERP மென்பொருட்கள் சந்தையில் உண்டு. ஒரு நிறுவனத்துக்கு ERP மென்பொருள் நிறுவுவதாக இருந்தால், அதன் அத்தனை நடவடிக்கைகளையும் தெரிந்த ஒருவர் வேண்டும். அவரின் வழிகாட்டுதலில்தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆனால், சிறைச்சாலையை முழுமையாகப் புரிந்துகொண்ட ஐ.டி நபர்கள் அதிகம் இருப்பது இல்லை. அமித் மிஷ்ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க, அவர் மிகச் சரியாக அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இப்போது `இன்வேடர் டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவரும் அமித் மிஷ்ராவின் `ஃபீனிக்ஸ்’ மென்பொருளை, இந்தியாவின் அனைத்து சிறைச்சாலை களுக்கும் பரிந்துரை செய்து கடிதம் எழுதியிருக்கிறது இந்திய உள்துறை அமைச்சகம். ஹரியானா மாநிலத்தில் இருக்கும் எல்லா சிறைச்சாலைகளிலும் `ஃபீனிக்ஸ்’ மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்து, அருணாசலப் பிரதேச மாநிலச் சிறைகளில் நிறுவப்போகிறார்கள். மற்ற மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
`வாழ்க்கை என்பதே தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு’ என்பார்கள். அந்தத் தற்செயலில் நல்லதும் உண்டு... கெட்டதும் உண்டு. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே நமக்கான சவால். அந்தச் சவாலில் வெற்றி பெற்றிருக்கிறார் அமித் மிஷ்ரா!