அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்காவிடின் ஐ.நா.அறிக்கை எவ்வாறு வந்திருக்கும்?
ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அரசியல் மாற்றம் ஏற்படாது, பழைய அரசாங்கம் இருந்திருந்தால் மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உட்பட வேறு சிலரின் பெயர்களும் வெளியாகியிருக்கும்.
இதனால் இவர்களும் படைத்தளபதிகளும் வெளிநாடு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருக்கும். இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் நாம் இதில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் பிரதான இரு கட்சிகளும் இணைந்து புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 30 ஆம் திகதி இலங்கை தொடர்பான ஐ.நா. வின் விசாரணை அறிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை விவகாரம் தொடர்பில் பிரிந்திருந்த நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இங்கு கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ யுத்தம் முடிவடைந்ததும் உள்ளகப் பொறிமுறை மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. செயலாளருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஒப்பந்தம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி தயான் ஜயதிலக்க ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை சார்பில் யோசனையொன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். இதிலிருந்தே இலங்கை விவகாரத்தில் பிரிவுகள் ஆரம்பமாகின.
2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச சமூகம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தன. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினால் 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா பிரேரணையொன்றை முன்வைத்தது. இதில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும். வேலிவேரிய சம்பவம் குறித்து விசாரிக்கவேண்டம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்படவேண்டும். போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனால் தான் ஐ.நா. வின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
நாட்டின் அரசியல் சூழ்நிலை மாறியிருக்காவிட்டால் இந்த அறிக்கையில் யுத்தக்குற்றம் தொடர்பிலும் அதனை எவ்வாறு விசாரிக்கவேண்டும் என்ற விடயம் குறித்தும் பெயர் விபரங்களுடன் விடயங்கள் வெளியாகியிருக்கும். ஆனால் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.