நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை சர்வதேசம் கண்காணிப்பாளராக செயற்படவேண்டும்
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேசம் உதவ வேண்டும் என்பதுடன் நிரந்தரத் தீர்வை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் வரை கண்காணிப்பாளராகவும் செயற் பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரி வித்தார்.
நாம் இந்த நாட்டில் இரண்டாந்தர பிரஜைகளாக வாழ விரும்பவில்லையென்பதை இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சர்வதேச சமூகத்துக்கும் சொல்லி வந்திருக்கிறோம். அதை அவர்கள் உணர்ந்து செயற்படுவார்கள் என்பதே எமது எதிர்பார்ப் பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிலாவெளி பெரிய குளம் திருக்கோணேஸ்வர வித்தியாலயத்தில் நேற்று நடை பெற்ற விஞ்ஞான ஆய்வு கூடத்திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.
நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சர்வதேசம் எமக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால் தான் மூன்று தினங்களுக்குமுன் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் வெளியிட்ட அறிக்கை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அத்துடன் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் உண்மை நிலைகளை உலகத்துக்கு வெளிக்கொண்டுவரும் அறிக்கையாகவும் வெளிவந்துள்ளது. சர்வதேசம் சாதகமாக இருந்திருக்காவிட்டால் இந்நிலைமை ஏற்பட்டிருக்க முடியாது.
சர்வதேசத்தின் சாதக நிலையென்பது அ றிக்கையில் மட்டும் தங்கியிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பரிகாரம் காணும் வகையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தரவும் வேண்டும். அந்த நிரந்தர தீர்வை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் வரை முழுமையான மேற்பார்வையாளர்களாகவும் அவர்கள் விளங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்பொழுது நாட்டினுடைய தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக்காணுவதற்கு ஆக்கபூர்வமான முறையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப்பயணத்தில் நாம் நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அது அவசியம். சகல மக்களையும் இணைத்து கொள்வதன் மூலம் தான் எமது நியாயங்களை அவர்களுக்கு நியாயப்படுத்தி நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
மூன்று தினங்களுக்கு முன் மனித உரிமைப் பேரவையினால் நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது. அவ்வறிக்கைப்படி உண்மை அறியப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும். நடைபெற்ற அழிவுகள் தொடர்ந்தும் ஏற்படாமல் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது.
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரமான நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் அறிக்கை வெளியிடப்பட்டதற்கு மேலதிகமாக ஐ.நா.சபையின் மனிதஉரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அமர்வு ஆரம்பித்த போதும் அறிக்கையை வெளியிட்ட போதிலும் இரு தடவை உரை நிகழ்த்தினார். இதேவேளை அமர்வு ஆரம்பித்த பொழுது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீரவும்
நீண்ட உரையாற்றியுள்ளார். இலங்கையில் விசுவாசமான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் நியாயமான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டுமென்பதையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவ்விதமான தீர்வு காணப்படாமை காரணமாகவே நாட்டில் இவ்வித நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும் சமரவீர ஒப்புக்கொண்டுள்ளார். இச் சூழலில் நாட்டினுடைய இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து ஆட்சியை நடாத்திக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் சாதகமான சூழல் ஒன்று காணப்படுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சாதகமான சூழ்நிலையை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புரிந்துணர்வு அடிப்படையில் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வல்லமை கொண்டவர்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இயன்றளவுக்கு எல்லாக் கட்சிகளையும் இணைத்து இந்தப் பயணத்தில் நாம் வெற்றி காணவேண்டுமென்பது எமது நிலைப்பாடாகும்.
கூடுதலாக இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் எமக்கு வழங்கவிரும்புகின்ற தீர்வை ஆதரிக்க வேண்டும். ஆமோதிக்க வேண்டும். அங்கீகரிக்க வேண்டும். எதுவும் ஒழித்து மறைத்து நடைபெறக் கூடாது. முழு விடயங்களும் வெளிப்படையாக நடைபெற வேண்டும். சகல மக்களுக்கும் உண்மை தெரிவிக்கப்பட வேண்டும். நாட்டின் நன்மை கருதி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய நன்மை கருதி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு தொடர வேண்டும். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். அந்த தீர்வு முழுமையாக அமுல்படுத்தும் வரையில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் மேற்பார்வை தொடர வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
புரட்சிகரமாக நாம் எதையும் கோரவில்லை. நாகரிகமான நாடுகளில் காணப்படும் இனம், மதம், கலாசாரம், மொழி அனைத்திலும் சமத்தன்மை பேணப்படும் ஆட்சி காணப்படுகிறதோ அவ்வித ஆட்சிமுறையொன்றையே நாம் கோரி நிற்கின்றோம். நாம் இந்த நாட்டில் இரண்டாந்தர பிரஜைகளாக வாழ விரும்பவில்லையென்பதை இந்நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் சர்வதேச சமூகத்துக்கும் சொல்லிவந்திருக்கிறோம். அதை அவர்கள் உணர்ந்து செயற்படுவார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்