கலப்பு விசேட நீதிமன்றத்தினுடாக சர்வதேச விசாரணையை நாம் வரவேற்கின்றோம் - கஜேந்திரகுமார்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை நிராகரித்து, கலப்பு விசேட நீதிமன்றத்தினுடாக சர்வதேச விசாரணையை நாம் வரவேற்கின்றோம்.
கலப்பு சிறப்பு நீதிமன்றத்தின் ஊடான சர்வதேச விசாரணை தொடர்பில் முழுமையான தெளிவு வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெளியான ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையினை வெளியிடும்போது இந்த அறிக்கை ஒரு மனித உரிமை சார்ந்த விசாரணை ஊடாக உருவாக்கப்பட்ட அறிக்கை எனவும் குற்றவியல் விசாரணை ஊடாக வெளியான அறிக்கை அல்ல எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அறிக்கையில் குறிப்பாக இந்த விடயத்தில் நாம் அக்கறை காட்டுவதுடன் இந்த விடயத்தை வரவேற்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பொறுத்த வரையில் குற்றவியல் விசாரணை ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடாகும். அவ்வாறு தண்டிக்கப்படாதவிடத்து அவர்களுடைய நீதிக்கான தாகத்தை தணித்துவிட முடியாது. மேலும் ஆணையாளர் உள்ளக விசாரணை பொறிமுறையினை முழுமையாக நிராகரித்துள்ளார். அதனையும் நாங்கள் வரவேற்கிறோம்.
இலங்கை அரசாங்கமும் அவர்களை சார்ந்துள்ள கட்டமைப்புக்களும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பங்காளிகள். எனவே அவர்களிடம் அந்த அநீதிகளுக்கான விசாரணையினை ஒப்படைத்தால் அங்கே உண்மைகள் மறைக்கப்படும் என்பதே எங்கள் நிலைப்பாடாகும். இந்தக் கருத்துப்படவே ஆணையாளரும் உள்ளக விசாரணை பொறிமுறையினை நிராகரித்துள்ளார்.
மேலும் இலங்கையில் கடந்த 30 வருடங்கள் நடைபெற்ற போர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மற்றும் நீதி கட்டமைப்புக்கள் நீதியாக நம்பகத்தன்மையாக செயற்படும் என்பதில் நம்பிக்கையற்றுப் போகின்றது. என்பதை உள்ளக விசாரணையினை நாம் எதற்காக நிராகரிக்கிறோம். என்பதற்கான காரணங்களாக ஆணையாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேவேளை கலப்பு விசேட நீதிமன்றம் என்ற ஒன்றை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விடயத்தில் தெளிவின்மை காணப்படுகின்றது. எங்களை பொறுத்தமட்டில் உள்ளக விசாரணை பொறிமுறை எதற்காக நிராகரிக்கப்பட்டதோ அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்ட அந்தக் கட்டமைப்புக்களுடன் கலந்த வகையில் ஒரு கலப்பு விசேட நீதிமன்றத்தை அமைப்பது முற்றிலும் பொருத்தமற்ற ஒன்றாகும் என்பதே எங்கள் நிலைப்பாடாகும்.
எனவே இந்த விடயத்தில் தெளிவுபடுத்தல் வழங்கப்படும் வரையில் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் தொடர்ந்தும் வலுவாக இருப்பது சிறப்பானதாக அமையும். மேலும் தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றார். அதாவது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும். என அதனை நாங்கள் வரவேற்பதுடன் தமிழக முதல்வருக்கு எங்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேலும் பொறுப்பு கூறல் விடயத்திலும் தமிழகத்தினால் ஒத்துழைப்புக்களை வழங்க முடியும்.
இதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. அதுவே எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது. எனவே அந்த பிரேரணை காத்திரமானதாக தமிழ் மக்களுக்கு நன்மையளிப்பதாக வருவதற்கும் தமிழகம் தமது காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.