அனைத்துலக விசாரணை மட்டுமே தேவை! – 170 கத்தோலிக்க குருமார்கள் ஐ.நாவுக்கு அவசர கடிதம்
அனைத்துலக விசாரணை மட்டுமே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என்று, வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க குருமார்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இலங்கை மீது அனைத்துலக விசாரணை தேவை என்று கோரி வந்த அமெரிக்காவும், இப்போது தவறான வழிநடத்தல் காரணமாக தமது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. நாட்டில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற பின்னர், புதிதாக அமைந்துள்ள தேசிய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் என ஐ.நா. தவறாக நம்புகிறது.
இலங்கையில் தவறிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பும் கலாசாரம் நிலவுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டமை அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது எனவும் கத்தோலிக்க குருமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், ஒற்றுமை இல்லாமல் சமாதானம் ஏற்படாது, அந்த ஒற்றுமை ஏற்பட நீதி வழங்கப்பட வேண்டும். அப்படியான நீதி, அனைத்துலக விசாரணை ஒன்றின் மூலமே வழங்கப்பட முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
உள்நாட்டு விசாரணை முறையாக நடைபெறாது என்பதே எங்களது கருத்து. அனைத்துலக விசாரணை நடைபெறும் போது அது பாரபட்சமற்றதாக இருக்கும். அது பொறுப்புக்கூறல் மற்றும் நீதிவழங்குவதற்கு உதவும்.சாட்சிகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படுவது மிகவும் அவசியம். அது இல்லாவிடில் விசாரணை உரிய பலனை அளிக்காது.” என்று குறிப்பிட்டுள்ளார்.