கூட்டமைப்பு, ஜே.வி.பி.,எம்முடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரி ஆட்சியமைக்க வேண்டும்
ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவைக் கைவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அதிக அமைச்சர் பதவிகளை வழங்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க நாம் தயாராகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதை நாங்கள் எதிர்க்கின்றோம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் எம்மோடும், அதற்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், ஜே.வி.பியையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்க முன்வர வேண்டுமென நான் அழைப்பு விடுக்கின்றேன்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க மக்கள் வாக்களிக்கவில்லை.எனவே அவ்வாறு ஆட்சியமைக்க முயற்சிப்பது மக்கள் ஆணையை மீறும் செயலாகும், அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்தோருக்கு அதிக அளவு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென்ற விடயத்தில் எமது ஆதரவு சுதந்திரக் கட்சிக்கு கிடைக்கும்.
எனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆட்சியமைப்பது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானமானது மக்களின் வாக்குரிமையை பலாத்காரமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது.
இவ்விடயத்தில் ஜனாதிபதியும் கட்டளை பிறப்பிப்பவராக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.