எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மஹிந்த தயார் - வாசுதேவ நாணயக்கார
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித் தார். இந்த ஆட்சியின் ஆயுட்காலம் வெகுவிரைவில் வீழ்ச்சியடைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், இந்த ஆட்சியை தேசிய அரசாங்கம் என்று கூற முடியாது.ஐக்கிய தேசியக் கட்சியின் "வாலாக" சிறி லங்கா சுதந்திரக் கட்சி இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களால் நாட்டின் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தனியார் "கம்பனிக்காரர்களின்" தேவைகளை நிறைவேற்றுவதற்கே முதலிடம் வழங்கும். இதனால் அரச ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள், மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும், வடமாகாண தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.
எனவே விரைவில் இந்த ஆட்சி வீழ்ச்சியடையும் , அதன்பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற முயற்சித்தாலும் அதுவும் கைகூடப்போவதில்லை. சம்பிக ரணவக போன்ற கடும் போக்குச் சக்திகள் இதனை எதிர்ப்பார்கள். எனவே கூட்டமைப்பின் ஆதரவுடனும் ஆட்சியை முன்னெடுக்க முடியாது.
மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே பாராளுமன்றத்தில் பலமுள்ள எதிர்கட்சியாக நம் செயற்படுவோம் என்றார்.