Breaking News

முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

விடுதலைப் புலிகளின் முன்னாள்
உறுப்பி னர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிவடைந்துள்ளது.

ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய நடேசபிள்ளை வித்தியாதரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தச் சந்திப்பு இன்று வவுனியாவில் நடைபெற்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் விருப்பம் தெரிவித்து, அதனைத் தமது கோரிக்கைகளாக இந்தச் சந்திப்பின்போது முன்வைத்ததாக வித்தியாதரன் தெரிவித்தார்.

எனினும் இப்போதைய அரசியல் சூழலில் முன்னாள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்படுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என கூறி தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் வித்யாதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு கூட்டமைப்பு இணங்கவில்லை என்பது தமக்கு வேதனையும் மனவருத்தமும் அளிக்கிறது கூட்டத்தில் பங்குபெற்ற முன்னாள் புலி உறுப்பினர் துளசி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக தங்களுக்குள் பேச்சுக்கள் நடத்தி முடிவெடுக்கப் போவதாகவும், இந்தப் பொதுத் தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவதாகவும் துளசியும் வித்தியாதரனும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.