Breaking News

முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிட இடமளிக்கிறார் ஆனந்தசங்கரி

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில், முன்னாள் போராளிகளும் போட்டியிடவுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் போராளிகள் பலரும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பல முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், தமது சமூகத்துக்காக தியாகங்களைச் செய்த அவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில் தவறு ஏதுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தாம் இம்முறை வடக்கு, கிழக்கிலும், நுவரெலிய மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுடன் ஒத்துப் போகவில்லை என்பதால் அதனுடன் இணைந்து போட்டியிடவில்லை என்றும் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட வீ.ஆனந்தசங்கரி குறைந்தளவு விருப்பு வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.