இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு 8 வருடங்களுக்குப் பிறகு முபாரக்கிற்கு இடம்
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அணியில் அஞ்சலோ மெத்தியூஸ் தலை வராகவும், லஹிரு திரிமான்னே உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வணியில் எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெகான் முபாரக் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை டெஸ்ட் அணித் தெரிவுகுறித்து, தெரிவுக்குழுத் தலைவர் கபில விஜேகுணவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,
‘எட்டு வருடங்களுக்கு முன்னர் முபாரக் டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியபோதிலும் தற்போது உள்ளூர் கிரிக்கட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அவர் முழு அளவிலான திறமையை வெளிப்படுத்திவருகின்றார். இதனை
அடிப்படையாகக் கொண்டும் அனுபவமும் இளமையும் கலந்த அணியைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற எமது திறந்த கொள்கையின் அடிப்படையிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம்’’ தெரிவித்தார்.
நடந்து முடிந்த இரண்டு உள்ளூர் கிரிக்கெட் பருவ காலங்களில் தலா 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ள ஜெஹான் முபாரக், நடந்து முடிந்த பருவ காலத்தில் 81.78 என்ற துடுப்பாட்ட சராசரியைப் பதிவு செய்திருந்தார். மேலும் அவரது களத்தடுப்பு ஆற்றல் அளப்பரியது என ஜொன்டி றோட்ஸ் அண்மையில் சான்றிதழ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பெரும்பாலும் கௌஷால் சில்வாவும் திமுத் கருணாரட்னவும் விளையாடுவர் எனக் குறிப்பிட்ட அவர், இறுதி பதினொருவர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கூறினார். குழாமில் குமார் சங்கக்கார உட்பட நான்கு விக்கட் காப்பாளர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் யார் விக்கட் காப்பாளராக களம் இறக்கப்படுவார் என்பது தெரியவில்லை.
இலங்கை அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்தியூஸும் உதவி அணித் தலைவர் லஹிரு திரிமான்னவும் தொடர்ந்தும் விளையாடவுள்ளனர். இவர்களைவிட துடுப்பாட்ட வீரர் கித்ருவன் விதானகே, சுழல்பந்துவீச்சாளர்களான ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா, தரிந்து கௌஷால் ஆகியோரும், வேகப் பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப், தம்மிக்க பிரசாத், துஷ்மன்த சமீர ஆகியோரும் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை உபாதைக் குள்ளாகியிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலும் இக் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்