20க்கு எதிராக சபையில் வாக்களிப்பு வர்த்தகமானியில் பிரசுரித்தால் வழக்கு - ஹக்கீம் அதிரடி
பல சிறுபான்மைக் கட்சிகளினதும், சிறு கட்சிகளினதும் எதிர்ப்பையும் மீறி 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுமா னால், அதற்கு எதிராக நாம் வாக்களிப்போம். மேலும் இதேவடிவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுமானால் நாம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மாத்தளை நகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக உயரதிகாரிகளுடன் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று (13) முற்பகல் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள், தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கேள்வியெழுப்பிய போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவு இந்த நாட்டில் புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக கொண்டுவரப்படுகிறது. விருப்பு வாக்கு முறையை முழுமையாக நீக்குவதற்கும், தொகுதிவாரி தேர்தல் முறைமையைச் சேர்த்து, விகிதாசார தேர்தல் முறையில் கலந்த ஒரு முறையை கொண்டதாக புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுகின்ற முயற்சியின் போது வெள்ளிக்கிழமை (12) அமைச்சரவையில் காரசாரமான வாக்குவாதம் எங்களுக்கும் அமைச்சர்கள் சிலருக்குமிடையில் ஏற்பட்டது.
அதற்கு முன்னைய தினம் 18 சிறுபான்மையினக் கட்சிகள், சிறிய கட்சிகள் இணைந்து இந்த விடயத்தில் ஒருமித்த தீர்மானத்திற்கு வந்திருந்தன. புதிய தேர்தல் முறையில் இரட்டை வாக்குச் சீட்டு அறிமுகப்படுத்தப்படவில்லையென்றால், அதனை ஆதரிக்கமாட்டோம் என்ற தெளிவான முடிவோடு அமைச்சரவையில் நாங்கள் கடுமையாக வாதாடினோம்.
அதையும் மீறி, எங்களது கோரிக்கையை கவனத்தில் எடுக்காமல் புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமானால் நாங்கள் எல்லோரும் அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்தின் போதும் ஆசனங்களை அதிகரிப்பதன் தீர்மானத்திற்கு அக்கட்சி உடன்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாராளுமன்றத்திற்கு சட்டமூலமாக அறிமுகப்படுத்தப்படுவது குறித்து தனது ஆட்சேபனையை அக்கட்சியின் செயற்குழு மேலும் தெரிவித்திருப்பதாகவும் அறிகிறோம்.
அந்த அடிப்படையில் அவசர அவசரமாக இந்த தேர்தல் திருத்தம் சிறுபான்மைக் கட்சிகளும், சிறிய கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து இந்த இரட்டை வாக்குச் சீட்டு என்ற விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால், அதை உதாசீனம் செய்து அறிமுகம் செய்கின்ற ஒரு தேர்தல் முறை எந்த விதத்திலும் சாத்தியமாகாது என்பதை மிகவும் தெளிவாக நாங்கள் சொல்லி வைக்கின்றோம்.
இறுதியில், இரண்டு பெரிய கட்சிகள் மட்டும் தேர்தல் செய்வதற்கு அனுமதிக்கின்றதாக இந்தத் தேர்தல் முறை வந்துவிடும் என்ற காரணத்தினால் எங்களது பலத்த ஆட்சேபனையை நாங்கள் தெரிவிக்கின்றோம். நானும், அமைச்சர்களான பழனி திகாம்பரம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் இந்த விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றோம். மீண்டுமொரு முறை ஜனாதிபதி சிறுபான்மையினக் கட்சிகள், சிறிய கட்சிகள் ஆகியவற்றின் சந்திப்புக்கு முன்வந்து உரிய மாற்றத்திற்கு இடமளிப்பார் என நம்புகின்றோம்.
இந்த 20ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். ஆகையால் அதற்கு எதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க நேரிடும் என்று திட்டவட்டமாக அமைச்சரவையில் கூறியிருக்கின்றோம். அத்துடன், எங்களது எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான சட்டவரைவு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டாலும் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.
இந்த 20ஆவது திருத்தத்தை உங்களால் தோற்டிக்க முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, தோற்கடிப்பதென்பது ஒருபுறமிருக்க, இந்தச் செயற்பாடு இந்நாட்டு சிறுபான்மை சமூகங்களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் எதிரான ஜனநாயக விரோத நடவடிக்கையென்று அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டதோடு, பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளினால் மட்டுமல்லாது சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குப்பலத்தாலும் வெற்றி பெற்ற தூரநோக்கு மிக்க ஜனாதிபதி அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
இந்த விடயத்தில் நான் குரலெழுப்பும் போது இனவாத அடிப்படையில் பேசுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். வேறு சில அடிப்படையே இல்லாத காரணங்களைக் காட்டுகிறார்கள். ஆனால், நாங்கள் இதனை விட்டுக் கொடுக்கப்பபோவதில்லை.
சமசமாஜக் கட்சி இலங்கையின் பழைமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். அதனைச் சேர்ந்த அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண இன்று (சனிக்கிழமை) காலை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களுக்குச் சார்பாக இந்த விடயத்தில் தமது எதிர்ப்பையும் வெளியிட்டார் என்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.