Breaking News

பாரா­ளு­மன்றை கலைக்க முயன்றால் புதிய அர­சாங்­கத்தை அமைப்­போம் - ஜாதிக ஹெல உறு­ம­ய எச்சரிக்கை

சிறு­பான்மை அர­சாங்கம் என்ற கார­ணத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறு­தி­யான நிலைப்­பா­டாக இருந்தால், நல்­லாட்சி திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­திற்குள் புதிய அர­சாங்­க­மொன்றை அமைப்போம் என்­று ஜாதிக ஹெல உறு­ம­யவின் இணைத் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்­து­ர­லிய ரத்ன தேரர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

தேர்தல் மறு­சீ­ர­மைப்பின் போது சிறு­பான்மை மற்றும் சிறிய கட்சி­களின் இணக்­க­பாடும் மிகவும் அவ­சி­ய­மாகும். எனினும் தற்­போதுசிறு­பான்மை கட்­சிகளினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இரட்டை வாக்கு சீட்டு முறைமை ஒரு போதும் சாத்­தி­ய­மா­காது. அந்த முறைமை பிரச்­சி­னை­களை மேலும் வலுப்­ப­டுத்தும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தூய்­மை­யா­ன­தொரு நாளைக்­கான தேசிய பேர­வையின் விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று கொழும்­பி­லுள்ள இலங்கை மன்றக் கல்­லூ­ரியின் இடம்­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போது முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சாங்கம் குழப்­பி­ய­டித்­துள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்­று­வதில் பாரிய சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலைமை நல்­லாட்­சிக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்த கூடி­ய­தாக மாறி­யுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்­றிய தரு­ணத்­தி­லேயே தேர்தல் மறு­சீ­ர­மைப்­பினை உள்­ள­டக்­கிய 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­தையும் பாரர்­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருக்க வேண்டும். ஆனால் அர­சாங்­கத்தின் ஆர்­வ­மின்மை இன்­மை­யினால் அதனை நிறை­வேற்ற முடி­யாமால் போனது.

தற்­போ­தைக்கு ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கமே காணப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தின் முரண்­பா­டான சூழலை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு அர­சினால் இய­ல­வில்லை. அர­சாங்கம் என்ற வகையில் பொறுப்­பு­ணர்வை தட்­டிக்­க­ழித்து செயற்­பட்டு வரு­கி­றது.

தேர்தல் மறு­சீ­ர­மைப்பு குறித்­தான பிர­தான யோச­னைக்கு அனைத்து கட்­சி­களும் ஆத­ர­வாக செயற்­பட்ட போதிலும் ஆச­னங்­களை நிர்­ண­யிப்­பதில் கட்­சி­க­ளி­டையே கருத்து வேறுப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. பொது­வாக பாரா­ளு­மன்­றத்தின் ஆச­னங்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க கூடாது என்­பது மக்­களின் வாத­மாக இருப்­பினும், தற்­போ­தைய சனத்­தொகை வளர்ச்­சிக்­கேற்ப ஆச­னங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதே அர­சியல் ஆர்­வ­லர்­களின் பிர­தான வாத­மாக உள்­ளது. அதே­போன்று சிறுப்­பான்மைக் கட்­சி­க­ளி­னதும் அபிப்­ரா­யமும் அது­வா­கவே உள்­ளது.

எனினும் ஆளும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது பாரா­ளு­மன்­றத்தின் ஆச­னங்கள் 225 க்கு மட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்­ப­த­னையே வலி­யு­றுத்தி வரு­கி­றது. இந்த யோச­னைக்கு சிறுப்­பான்மை மற்றும் சிறியக் கட்­சிகள் ஒரு­போதும் உடன்­ப­டாது. எனவே தற்­போ­தைக்கு அமைச்­ச­ர­வை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள 237 ஆச­னங்கள் அனைத்து தரப்­பி­ன­ராலும் ஏற்­றுக்­கொள்ள கூடிய திருத்­த­மாக உள்­ளது.

இந்­நி­லையில் தேர்தல் மறு­சீ­ர­மைப்பின் போது சிறுப்­பான்மை மற்றும் சிறியக் கட்­சி­களின் இணக்­க­பாடு மிகவும் அவ­சி­ய­மாகும். எனினும் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு சிறுப்­பான்மை கட்­சி­யினால் தற்­போது முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இரட்டை வாக்கு சீட்டு முறைமை ஒரு போதும் சாத்­தி­ய­மா­காது. அந்த முறை­மை­யா­னது அச­னங்கள் தொடர்­பி­லான பிரச்­சி­னை­களை மேலும் வலுப்­ப­டுத்தும். இதனால் தற்­போ­தைய முறை­மையை விடவும் ஆபத்­தான நிலை­மையை ஏற்­ப­டுத்­தலாம். எனினும் குறித்த முறை­மையில் சாத­க­மான அம்­சங்­களும் உள்­ளது.

எனினும் சிறுப்­பான்மைக் கட்­சி­களின் யோச­னைக்கு பிர­தான கட்­சிகள் இரண்டும் எதிர்ப்­பினை வௌிப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆசன கணக்கை காரணம் காட்டி அர­சாங்கம் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு முட்­டுக்­கட்­டை­யாக உள்­ளது. நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­துவோம் என எதி­ரணி பொது வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக செயற்ப்­பட்ட நாம் உறு­தி­ய­ளித்­தி­ருந்தோம். இந்­நி­லையில் அந்த வாக்­கு­று­திக்கு காலை­வார முற்­ப­டு­வது நியா­ய­மா­காது.

பாரா­ளு­மன்­றத்தின் சிறுப்­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்ற கட்­சியின் தலைவர் பிர­த­ம­ராக்­கப்­பட்­டுள்ள நிலை­மையில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை தட்­டிக்­க­ழிக்க முனை­வது பொறுப்­பு­ணர்­வு­மிக்க தலை­வர்­களின் செய­லாக கரு­த­மு­டி­யாது.

ஆகவே பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது ஜனா­தி­ப­திக்­குள்ள அதி­கா­ரங்­க­ளுக்கு உரிய பங்­காகும். இந்­நி­லையில் மக்­களின் ஆணைக்கு மாறாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு எந்­த­வொரு உரி­மையும் கிடை­யாது.

எனவே அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை நிறை­வேற்­றியே ஆக­வேண்டும். விகி­தா­சார முறை­மை­யினை மாத்­திரம் வைத்­துக்­கொண்டு விருப்பு வாக்கு முறை­மையை முற்­றாக இல்­லாமல் செய்ய வேண்டும்.

விருப்பு வாக்கு முறை­மை­யினால் நாட்டை ஆட்சி செய்ய தகை­மை­யற்றோர், கொள்­கை­யற்றோர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கின்­ற­னர.் இதன்­கா­ர­ண­மாக கட்­சி­க­ளுக்கு உள்­ளேயே தக­ரா­றுகள் ஏற்­ப­டு­கின்­றன. அதே­போன்று பண­வ­சதி படைத்­தோ­ருக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கி­றது. ஆகவே இந்த முறை­மையை மாற்­றி­ய­மைத்து இலங்கை அர­சியல் கலா­சா­ரத்தை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்க வேண்டும்.

இந்த வர­லாற்று பூர்­வ­மான மாற்­றத்­திற்கு எவரும் தடை­யாக இருக்க முடி­யாது. சிறுப்­பான்மை அர­சாங்­கத்தின் பிர­தமர் என்ற வகையில் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பாரிய பொறுப்­பாகும். அவ­ரினால் நல்­லாட்சி வேலைத்­திட்­டங்­களை தட்­டிக்­க­ழித்து விட்டு செயற்­பட முடி­யாது. ஆகவே அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­ததை நிறை­வேற்ற வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். இதற்கு தொடர்ந்தும் அர­சாங்கம் தடை­யாக இருந்தால் அழுத்தம் பிர­யோ­கிக்கும் சக்­தி­யாக நாம் பரி­ண­மிப்போம்.

இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் அரா­ஜக ஆட்­சி­யினால் பாரா­ளு­மன்­றத்தின் நட­வ­டிக்­கைகள் முற்­றாக குழம்­பி­யுள்­ளது. ஆகவே தேர்தல் மறு­சீ­ர­மைப்பு என்­பது நாட்டு மக்­களின் பிர­தான அபி­லா­ஷை­யாகும். அதனை நிறை­வேற்­றாமல் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு இய­லாது.

சிறுப்­பான்மை அர­சாங்கம் என்ற கார­ணத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்தை பிற்­போ­டு­வ­தற்கு அர­சாங்கம் முனை­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணி­யினர் இடை­யூ­ராக காணப்­ப­டு­வ­தா­கவும் அர­சாங்கம் குற்றம் சுமத்­து­கி­றது.

அது முற்­றிலும் தவ­றான வாத­மாகும். அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு மஹிந்த ஆதரவு அணியினர் வாக்களித்தனர். எனவே 20 ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் தேசதுரோகிகள் யார் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் சிறுப்பான்மை அரசாங்கம் என்ற காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி அமைக்க முடியாவிட்டால் தற்போதைய பாராளுமன்றத்தினுள் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும்.

ஊழல் மோசடி தொடர்பில் அரசின் செயற்பாடு

நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்ததை போன்று ஊழல் மோசடிக்கு தண்டனை வழங்குவோம். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தினூடக இதற்கான அடித்தாளத்தை இட்டுள்ளோம் என்றார்.