"சந்திரிகாவின் பொறுப்பற்ற செயற்பாடுகளே பொதுபலசேனா அமைப்பு உருவாக காரணம்''
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவரது பொறுப்புக்களை சரிவர செய்திருந்தால் பொது பல சேனா உருவாகியிருக்காது என அவ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்தன தேரர் தெரிவித்தார்.
பொது பல சேனா அமைப்பின் கிருலப்பனனை அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 2001 ஆம் ஆண்டு பௌத்த சாசன ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
அறிக்கையில் நாட்டில் மத மாற்றம்,கிறிஸ்தவ மதத்தவரின் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. இதனை முறியடிக்கும் விதத்தில் நாம் செயற்பட்டால் எம்மை இனவாத அமைப்பு என்கின்றனர்.
2001 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பௌத்த மதத்தவர் மீதான ஆக்கிரமிப்புக்களை முறியடித்திருந்தால் பொது பல சேனா என்ற ஒரு அமைப்பு உருவாகியிருக்காது.அதேவேளை 2001 ஆம் ஆண்டில் முன்வைக்கப் பட்ட மேற்படி அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ,பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க போன்றோர் அறிந்துள்ளனர்.
அவர்கள் அறிந்திருந்தும் கூட நாட்டில் நாம் இனவாத அமைப்பாகவே அடையாளப் படுத்தப் பட்டுள்ளமை கவலைக்குரியது. நாம் நாட்டில் இனக் கலவரங்களை கட்டவிழ்த்து விடுவதாக செய்திகள் பல வெளியாகியுள்ளன.
ஆனால் அவற்றுக்கும் எமது அமைப்புக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.இனவாத கலவரங்களை கட்டவிழ்த்து விட்டவர்கள் இன்று எம்மீது குற்றம் சாட்டுபவர்கள் பக்கமே உள்ளனர். மறுபுறம் இனவாத அமைப்பின் உறுப்பினர்களை கைது செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அவ்வாறு கைது செய்வதென்றால் முதலில் மேற்குறிப்பிட்ட 2001 ஆம் ஆண்டு பௌத்த சாசன ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்ட போது அமைதியாக இருந்த தற்போதைய தலைவர்களையே முதலில் கைது செய்ய வேண்டும் .
இம்முறை வெசாக் தின கொண்டாட்டங்களின் போது பௌத்த மத பாரம்பரியம் சீர்குலைக்கப்பட்டுள்ளதுவெசாக் தின கொண்டாட்டங்களின் போது பல வகையிலும் பௌத்த மத பாரம்பரியங்களை சீர்குலைக்கும் செயற்பாடு இடம் பெற்றுள்ளமைக்கு சிங்கள ஊடகமொன்றே காரணம் இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிங்கள ஊடகமொன்று வெசாக் அலங்கார கூடுகளில் சர்வ மத அடையாளங்களை காட்சி படுத்துமாறு தெரிவித்திருந்தது.
இது முற்றிலும் தவறான வழிகாட்டலாகும் பௌத்த மக்களுக்கு பௌத்த மதத்தின் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் இச் செயற்பாட்டில் தமக்கு உடன்பாடு இல்லை. எதிர்காலத்தில் இவ்வாறான தவறான வழி நடத்தல்களை நாட்டின் பொது மக்கள் உள்வாங்கக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தல் விடுத்தார்.