உதயங்கவின் ஆயுத விவகாரம்: விஷேட பொலிஸ் குழு ரஷ்யா விரைவு
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்காவைக் கைது செய்வதற்காக இலங்கைக்கும், உக்ரேனுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை பொலிஸ் புலனாய்வுக் குழு கடந்த வாரம் உக்ரேனுக்குச் சென்றுள்ளது. உதயங்காவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்பட வுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து கடந்த ஜனவரி 09 முதல் உதயங்கா தலைமறைவாகி உள்ளார். புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் வெளிநாடுகளிலுள்ள இராஜதந்திரிகள் பலர் திருப்பியழைக்கப்பட்டனர். அவ்வாறு திருப்பியழைக்கப்பட்டவர்களில் உதயங்காவும் ஒருவர். ஆனால், அவர் இலங்கை திரும்பவில்லை.
உக்ரேனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக உக்ரேனின் அரசாங்கம் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தற்போது இரு முறைப்பாடுகளைச் செய்துள்ளது. இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்புக்கு இவரின் செயற்பாடுகள் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் மிக் 27 விமானங்களை வழங்கியதாக இவரின் மீது ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவரைக் கைதுசெய்வது அவசியமென இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உக்ரேன் சென்றுள்ள இலங்கை பொலிஸ் அதிகாரிகள் அங்கு விசாரணைகளை மேற்கொள்வர். உதயங்க வீரதுங்க விரைவில் கைதாவாரென்றும் தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முன்னாள் தூதுவர் தொர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மிக நெருங்கிய உறவினரான இவர், முதலில் ரஷ்யாவில் உணவகம் ஒன்றை நடத்திவந்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவினால் பின்னர் தூதுவராக நியமிக்கப்பட்டார். அந்த நிலையிலேயே உக்ரேன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செவய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.