பத்து வருடங்களில் மஹிந்த செய்யாததை நூறு நாட்களில் மைத்திரி செய்துள்ளார் - பிரதமர்
கடந்த பத்து வருட காலமாக ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜ பக் ஷ செய்யாததை இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நூறு நாட்களில் செய்து காட்டியுள்ளார். நாம் ஆரம்பித்துள்ள பணிகளை நிறைவேற்ற எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன்விழா நிகழ்வு நேற்று தலவாக்கொல்லை நகர சபை மைதானத்தில் அதன் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி. திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் யாவும் தயாராக இருந்த போதிலும், கால நிலை சீர்கேடு காரணமாக ஹெலிகொப்டர் பயணிக்க முடியாத நிலையில் அவர் வரமுடியாத நிலையில் இருந்ததாக இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு காணிக்கான உறுதிப் பத்திரங்களை கையளித்தார். அமைச்சர்கள் அர்ஜுன ரணதுங்க, ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்கள் கே. வேலாயுதம், வீ. இராதகிருஸ்ணன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏழை எளிய மக்களின் வாழ்வுக்கும், உரிமைக்கும் குரல் கொடுத்து வந்துள்ள தொழிலாளர் தேசிய சங்கம் தனது பொன்விழாவைக் கொண்டாடுவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தேடி இந்த இடத்தில்தான் மாபெரும் கூட்டம் நடத்தப்பட்டது. இன்று அதே இடத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வீடமைப்புக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்த போது, காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தேன். எனினும், அது சரியான முறையில் கைகூடவில்லை. இருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இந்த முறை நான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, மலையக மக்களின் சார்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பி. திகாம்பரமும், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக கே. வேலாயுதமும், கல்வி இராஜாங்க அமைச்சராக வீ. இராதகிருஸ்ணனும் நியமிக்கப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகள், அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தனியான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுமே அல்லாமல், மீண்டு லயன்கள் உருவாக்கப்படாது. இந்த நாட்டில் ஏனைய மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் மலையக மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான வீடமைப்புத் திட்டமும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவுள்ளது.
மலையகத்தில் விஞ்ஞானக் கல்வி வளர வேண்டும் என்பதற்காக 25 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன. இதன் மூலம் நுவரெலியா, கண்டி மாத்தளை, கேகாலை இரத்தினப்ரி, பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறவுள்ளார்கள். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர், நுவரெலியா மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.
கடந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் அவர்கள் சுகபோகங்களி அனுபவித்தார்கள். சாதாரண மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால், இன்று தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் எனஅனைத்து மக்களுக்கும் மைத்திரி அரசாங்கத்தில் நன்மைகள் கிடைத்து வருகின்றன. மகிந்த ராஜபக்ஸ பத்து வருட காலத்தில் செய்யத் தவறியதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நூறு நாட்களில் செய்து காட்டியுள்ளதோடு பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாம் ஆரம்பித்துள்ள பணிகளை நிறைவேற்ற எதிரரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றார்.