மக்கள் வெள்ளத்தில் நாம் தமிழரின் திருச்சி மாநாடு (படங்கள்,காணொளி இணைப்பு)
நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி, எடமலைப் பட்டிபுதூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.
உலகம் முழுவதும் இருந்து இந்த மாநாட்டிற்கு பல இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு நிகழ்வில் முதலாவதாக ஆதி தமிழர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது, ஏராளமான மக்கள் வரிசையாக மாநாட்டு திடலில் வந்தமர்ந்து கொண்டிருந்த வேளையில் பிரபாகரனின் பதாகையை ஒரு சில இளைஞர்கள் மாநாட்டு மைதானத்திற்கு எடுத்து வந்தனர்.
அவ்வேளையில் அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்தார்கள். சில உணர்வாளர்கள் தங்களையும் மீறி கண்களில் வழிந்த கண்ணீரையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பரித்தது. கூடியிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. அதனை பார்த்த சீமானும் கண் கலங்கி கைதட்டினார்.
சீமான் பேசுவதற்கு முன்பாக,
ஈழத்திலிருந்து தளபதி சூசை அவர்கள்
2009 மே மாதத்தில் பேசிய ஒலிப்பதிவு போடப்பட்டது.
அதில்
" போர் மிகவும் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நம் மக்கள் பெரும் இழப்பை சந்தித்துவிட்டனர். ஆனாலும் நாம் அடிபணியமாட்டோம், கடைசி மூச்சு உள்ளவரை சண்டையிட்டு மடிவோம் என்று போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு சீமான்,வைகோ,நெடுமாறன் போன்றவர்களிடம் கூறுமாறு கூறிவிடுங்கள் "
என்று முடிவு பெற்றது அப்பதிவு.
தளபதி சூசை அவர்களின் களமுனை இறுதி உரையாடல்
தளபதி சூசை அவர்களின் களமுனை இறுதி உரையாடல்
மாநாட்டில் பேசிய சீமான்,
இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய மக்கள் முதன்முதலாக இன உணர்வுடன் இங்கு கூடியுள்ளனர். மாற்று அரசியல் புரட்சியை முன்வைக்கிறோம். ஈழம் விடுதலை ஒன்று தான் வாழ்நாள் இலக்கு. தமிழ் தேசிய இனத்திற்கு என ஒரு தேசம். அதனை அடைவதற்கான தொடக்கம் தான் 2016 தேர்தல்.
தமிழர்களுக்கு என்று அதிகாரம் இல்லை. அதனால் தான் அண்டை நாட்டில் நமது மீனவர்கள், அண்டை மாநிலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் நடந்த இனஅழிப்பை திமுக, அதிமுக தடுக்கவில்லை. தமிழர்களை காக்கவில்லை. சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது திட்டமிட்ட இன படுகொலை நடத்தியது. இதனை கண்டித்து அதிமுக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
தனி ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தனி தமிழ் ஈழ சோசலிச குடியரசு அமையவேண்டும். தனி ஈழம் மட்டும் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றது. அதன்காரணமாக நாம் தமிழர் கட்சி மாநிலத்திலுள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ளது என்றார்.