குரு பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி? கும்பம்
ஏணியாய் இருப்பார் ஏழாமிடத்து குரு மற்றவர் தயவை எதிர்பார்க்காத கும்ப ராசி அன்பர்களே!
குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்தார். அவர் மன நிம்மதியை
இழக்கச் செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பார்.
பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். இப்போது குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே, குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். டிசம்பர் 20-ந் தேதி, குரு சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதுசிறப்பான இடம் அல்ல. பொருளாதர சரிவையும், மனவேதனையும், எதிரிகளால் தொல்லையையும் தரலாம். ஆனால், அவரது 7-ம் இடத்துப்பார்வையால், எந்த பிரச்னையையும் முறியடிக்க வாய்ப்பு கிடைக்கும். சனி பகவான், ஜூன் 12-ந் தேதி அன்று வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார்.
சனி வக்ரம் அடைந்து 9-ம் இடத்தில் இருக்கும் போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனால், வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார்.மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
முன்னேற்றப் பாதைக்கு அடியெடுத்து வைக்கும் காலம். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சிற்சில தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.குடும்பத்தில் வசதிகள் மேம்படும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும்.
வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் சிரத்தை எடுத்து புதிய வீடு கட்டலாம். அதற்காக கடன்பட வேண்டியதிருக்கும். புதிய வாகனம் வாங்கலாம்.
தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். ஆனால், அதற்குத் தகுந்த பலன் ஒன்றுக்கு பத்தாக இருக்கும்.
பணியாளர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் உயர்வான நிலையை அடைவர்.
உங்கள் உழைப்புக்கு மதிப்பு இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.
கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கவுரவத்தை இழக்காவண்ணம் இருப்பர். உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் இந்த கல்விஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.
நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயத்தில் நல்ல வளம் காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவர். தானிய விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை செல்வங்கள் பெருகும். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் முன்னேற்றமான பலன் காண்பர். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர்.
உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண் நோய் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தவர்கள் குணம் அடைவர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.