Breaking News

குரு பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி? இடப இராசி

கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2 100/60 நான்காம் இடமானாலும் நல்லதைச் செய்வார்

தடையை முறியடித்து வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!
குருபகவான் இதுவரை 3-ம் இடத்தில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம்.

இந்த நிலையில் குரு 4-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால பலன்களில் இருந்து இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும்போது மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. 

ஆனால் அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில், டிசம்பர் 20-ந் தேதி குருபகவான் கன்னி ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதுசிறப்பான இடம். அவர் குடும்பத்தில் முன்னேற்றம், பொருளாதாரத்தில் வளர்ச்சி, மனநிம்மதி ஆகிய நற்பலன்களைத் தருவார். மேலும் குருவின் 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக அமையும். சனிபகவான் ஜூன் 12 அன்று வக்கிரம் அடைந்து, துலாம் ராசிக்கு மாறுகிறார். 

அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். வக்கிரம் அடைந்து 6-ம் இடத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்வார். குறிப்பாக, முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.கேதுவின் பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. நல்ல பணப்புழக்கம் இருக்கும். பகைவர்களின் தொல்லை இருக்காது. 

எனவே எடுத்த எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்த்தால் கெடுபலன்கள் அறவே இருக்காது.குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். உறவினர் வகைகளில் விரோதம் ஏற்படலாம். எனவே, அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். 

கணவன், மனைவி விட்டுக் கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தடை ஏற்பட்டு விலகலாம். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இருந்து வந்த தொய்வு நிலை மாறும். வீண் அலைச்சல் இருக்காது. நீங்கள் சென்ற இடமெல்லாம் காரிய அனுகூலம் ஏற்படும். பொருள் விரயம் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். நல்ல வருமானம் காணலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை காணலாம். 

எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால், எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதம் ஆகலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். 

சிலர் எதிர்பாராத இடத்துக்கு மாற்றல் ஆகலாம். அது கூட எதிர்காலத்துக்கு நல்லதாக அமையலாம். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதே நேரம் பொருளாதார நிலையில் எந்த பிற்போக்கான நிலையும் இருக்காது. சமூக நல சேவகர்கள், அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் காணப்படுவர். எதிர்பார்த்த பொறுப்பு கிடைப்பதில் சிரமம் இருக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். 

ஆசிரியர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். விரும்பிய பாடம் கிடைக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். விவசாயத்தில் நல்ல லாபம் காணலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. கால்நடை செல்வம் பெருகும். பெண்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். 

பொன்,பொருள் வந்து சேரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உடல்நலம் சுமாராகவே இருக்கும். ராகுவால் மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும். பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வசதி இருந்தால் திருச்செந்தூர், அல்லது ஆலங்குடி சென்று வரலாம். ஏழைகள் படிக்க உதவுங்கள். லட்சுமி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

உங்கள் இராசிக்கு எப்படி?

மேஷம்                  இடபம்              மிதுனம்            கடகம்        

சிம்மம்                   கன்னி              துலாம்               விருட்சியம்

தனு                          மகரம்              கும்பம்               மீனம்