Breaking News

மாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் 200 பேருக்கு வேலைவாய்ப்பு - டெனீஸ்வரன்

வட­மா­காண போக்­கு­வ­ரத்து நிய­திச்­சட்டம் அடுத்த மாத­ம­ளவில் மாகாண சபை அனு­ம­திக்கு விடப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டதும் மாகா­ணத்தின் போக்­கு­வ­ரத்து இல­கு­ப­டுத்­தப்­படும். அத்­துடன் சுமார் 200பேர் வரையில் வேலை வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென வட­மா­காண சபையின் போக்­கு­வ­ரத்து மீன்­பிடி அமைச்சர் பா.டெனீஸ்­வரன் தெரி­வித்தார்.

அமைச்சின் அலு­வ­ல­கத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்­கையில் வட மாகா­ணத்­துக்­கென வீதி போக்­கு­வ­ரத்து அதி­கார சபை ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது இதனை உரு­வாக்­கி­யுள்ளோம். இதனை சபை அனு­ம­திக்­காக அடுத்­த­மாதம் அளவில் சமர்ப்­பிக்­க­வுள்ளேன். இந்த உரு­வாக்­க­மா­னது மத்­திய அர­சாங்­கத்தின் சட்­டங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவே உள்­ளது.

இந்த சட்டம் முத­ல­மைச்­ச­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டதும் சுமார் 200பேர் வரையில் வேலை­வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­வார்கள் என்றார்.

வட­மா­கா­ணத்­திற்­குட்­பட்ட போக்­கு­வ­ரத்து நடை­மு­றைகள் தொடர்பில் பல பிரச்­சி­னைகள் எழுந்­துள்­ளது. இவற்றை கட்­டுப்­ப­டுத்தி பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டாத வகையில் இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் போக்­கு­வ­ரத்தை சுமுக­மாக நடத்த மாவட்ட ரீதியில் குழுக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இக் குழுக்­க­ளுக்கு மாவட்ட செய­லக பிர­தம கணக்­காளர் தலை­மையில் பொலி­ஸா­ரையும் இணைத்து மாவட்ட போக்­கு­வ­ரத்து பிரச்­சி­னைகள் ஆராய்ந்து நேர அட்­ட­வணை உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.

இத்­த­கைய பிரச்­சி­னைகள் தீர்வு காணப்­பட்டு நேர அட்­ட­வணை பின்­பற்றத் தொடங்­கி­யதும் மக்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து இல­கு­ப­டுத்­தப்­படும். இதன் பின்னர் போக்­கு­வ­ரத்து நடை­மு­றை­களை பின்­பற்­றாத தனியார் அரச போக்­கு­வ­ரத்து சேவையில் உள்­ள­வர்­க­ளுக்கு எதிராக சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

மேலும் இவற்றின் பின்னர் போக்­கு­வ­ரத்து சேவையில் ஈடு­படும் ஓட்­டு­நர்கள் நடத்­து­னர்­க­ளுக்கு சீருடை வழங்­குதல் முதல்­கொண்டு பல நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

இதே­வேளை வட­மா­கா­ணத்தில் மீன­வர்கள் தொடர்­பாக பல நட­வ­டிக்­கை­களை மாகாண மற்றும் மத்­திய அர­சாங்­கத்­துடன் இணைந்து மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் இதற்­காக வட­மா­காண கடற்­றொழில் தொடர்­பான சங்­கங்­க­ளி­ட­மி­ருந்து பல கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றுக்கு ஏற்ப பல திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

இதில் வட­மா­கா­ணத்தில் கடற்­றொழில் சங்­கங்கள் மற்றும் கிரா­மிய கடற்­றொழில் அமைப்­புக்கள் என இரு அமைப்­புக்கள் உள்­ளன. இதில் எந்­த­மைப்பு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பிலும் தடை செய்­யப்­பட்ட தொழில் முறைகள் தொடர்­பிலும் காணப்­படும் தெளி­வுகள் மற்றும் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மாகாணத்தில் உள்ள கடற்றொழில் சார்ந்த அமைப்புக்கள் தமது பதில்களை வழங்க வேண்டும்.

இத்தகைய பதில்களை கொண்டு மாகாண கடற்றொழில் அமைப்புக்களை இணைத்து மாநாடு ஒன்றை வைத்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.