Breaking News

இலங்கையின் வரட்டு படிவாதம் - வீரகேசரி


இறுதி யுத்­தத்தின் போது, அப்­பட்­ட­மான முறையில்
மனித உரிமை மீறல்­களில் அரச படைகள் ஈடு­பட்­டி­ருந்­தன என்­பது பல வழி­க­ளிலும், பல­த­ரப்­பி­ன­ராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன.

ஆனாலும், முழுப் பூச­ணிக்­காயை சோற்றில் மறைப்­பது போன்று அவற்றை அடி­யோடு அர­சாங்கம் மறுத்­தி­ருக்­கின்­றது. மனித உரி­மைகள் மீறப்­ப­ட­வில்லை என்று அடித்துக் கூறு­கின்ற அர­சாங்கம், சிவி­லி­யன்கள் எவ­ருமே கொல்­லப்­ப­ட­வில்லை என்றும் ஸீரோ கசு­வ­லிட்டி கொள்­கை­யையே அரச படைகள் கடைப்­பி­டித்­தி­ருந்­தன என்றும் கூறி வரு­கின்­றது.

அது மட்­டு­மல்­லாமல் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட யுத்­த­மா­னது, அவர்­களால் கேட­யங்­க­ளாக வைக்­கப்­பட்­டி­ருந்த அல்­லது சிறைக்­கை­தி­க­ளாகப் பிடித்து வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் மக்­களை அவர்­களின் பிடியில் இருந்து மீட்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு மனி­தா­பி­மான யுத்தம் என்றும் அர­சாங்கம் சொல்­கின்­றது. இந்த மனி­தா­பி­மான யுத்­தத்தில் கொல்­லப்­பட்­ட­வர்கள் எல்­லோ­ருமே விடு­த­லைப்­பு­லி­களே, பொது­மக்கள் எவ­ருமே கொல்­லப்­ப­ட­வில்லை என்­பது அர­சாங்­கத்தின் கூற்று.

ஏனென்றால் இரா­ணு­வத்­தினர் ஒரு கையில் மனி­தா­பி­மா­னத்­தையும், மறு கையில் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராகத் துப்­பாக்­கி­க­ளை­யுமே ஏந்திச் சென்­றார்கள், சமர் புரிந்­தார்கள் என்­பது அர­சாங்­கத்தின் விளக்­க­வு­ரை­யாக இருக்­கின்­றது. விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க தலை­மையில் நடத்­தப்­பட்ட யுத்­த­மா­னது சமா­தா­னத்­திற்­காக நடத்­தப்­பட்ட யுத்தம் என்று வர்­ணிக்­கப்­பட்­டி­ருந்­தது போன்று ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச நடத்­திய யுத்தம் மனி­தா­பி­மான யுத்தம் என்று சோடிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

யுத்தம் என்­பதே எதி­ரி­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற ஆட்­களைச் செய­லி­ழக்கச் செய்­வ­தற்­காக, அவர்­களைக் காயப்­ப­டுத்­தியும் கொல்­வ­தை­யுமே இலக்­காகக் கொண்­ட­தாகும். மனி­த­ருக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வதே இதன் அடிப்­படை நோக்­க­மாகும். அதற்கு ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க கார­ணங்கள் பல இருக்­கலாம். ஆயினும், சமா­தா­னத்­திற்­கா­கவும், மனி­தா­பி­மா­னத்­தி­ற்கா­கவும் யுத்தம் செய்தோம் என்று, இலங்கை அர­சாங்கம் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்­திற்குக் காரணம் சொல்­வதை முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இந்த யுத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யதே அரச தரப்­பி­னர்தான் என்ற அடிப்­படை உண்­மையை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு இலங்­கையில் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் தயா­ராக இல்லை என்­பது முத­லா­வது விட­ய­மாகும். யுத்தம் ஒன்றைத் தவிர்த்து, சமா­தான வழியில் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு எந்­த­வொரு இலங்கை அர­சாங்­க­முமே மனப்­பூர்­வ­மான முறையில், நேர்­மை­யான வழியில் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்­பது இரண்­டா­வது விட­ய­மாகும்.

முரண்­பாடு ஒன்றில் குறிப்­பாக புரை­யோடிப் போயுள்ள அர­சியல் முரண்­பா­டொன்றில், சமா­தான வழியில் தீர்­வு­களைக் காண்­ப­தென்­பது இல­கு­வான காரி­ய­மல்ல என்­பது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க ஒன்­றாகும். இருந்த போதிலும், அந்த முரண்­பாட்டை முடி­வுக்குக் கொண்டு வரு­வதற்கு­ரிய வழி­மு­றை­களை, இறை­மை­யுள்ள ஓர் அரசு என்ற வகையில் விட்­டுக்­கொ­டுப்­போடும், சகிப்புத் தன்­மை­யோடும், வழங்­கப்­ப­டு­கின்ற உறு­தி­மொ­ழி­களை நேர்­மை­யான வழியில் நிறை­வேற்­று­கின்ற தன்­மை­யோடும், இலங்­கையில் அரை நூற்­றாண்­டுக்கு மேலாக ஆட்சி செலுத்­திய அர­சாங்­கங்கள் மேற்­கொள்­ள­வில்லை என்­பது மறுக்க முடி­யாத உண்­மை­யாகும்.

இலங்கை அர­சு­களின், மிக முக்­கி­ய­மான இந்த அர­சியல் பல­வீ­னமே, சர்­வ­தேச விசா­ர­ணையின் முன்னால் பிடி­வா­தக்­கா­ரர்­க­ளாக, முரட்­டுத்­த­ன­மான அர­சியல் போக்கைக் கொண்­ட­வர்­க­ளாக, அரச தரப்­பி­னரைக் கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கின்­றது.

மோச­மான யுத்தம் ஒன்றில் வெற்­றி­யீட்­டி­யதன் பின்னர் - அந்த வெற்­றி­யா­னது, நேர்­மை­யா­ன­தாக இருக்­கலாம் அல்­லது மோச­டி­யான அர­சியல் அணு­கு­மு­றை­களைக் கடைப்­பி­டித்­த­தாக இருக்­கலாம். - இறை­மை­யுள்ள ஓர் அர­சாங்கம் என்ற வகையில், சொந்த நாட்டுப் பிர­ஜை­களில் ஒரு தொகு­தி­யி­ன­ருக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட மோச­மான யுத்தம் ஒன்றின் பின்னர், விட்டுக் கொடுப்­போடும், நேர்­மை­யா­கவும் நடந்து கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் இந்த அர­சாங்கம் அவ்­வாறு நடந்து கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

சரி, பிழை­க­ளுக்கு அப்பால் யுத்த முனையில் நடை­பெற்ற வேண்­டத்­த­காத காரி­யங்­களை ஏற்­றுக்­கொள்­வதும், அதற்குப் பொறுப்­பேற்றுக் கொள்­வ­துமே உண்­மை­யான யுத்த வெற்றி வீரர்­க­ளுக்­கு­ரிய பண்­பாகும். துட்­ட­கை­மு­னு­வுக்கும் எல்­லா­ள­னுக்கும் இடையில் நடை­பெற்ற யுத்­தத்தின் பின்னர், இறந்­துபோன எதி­ரியை மதித்துக் கௌர­வித்து, அதன் மூலம் சிறப்­பான மனிதப் பண்பு நிலை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான பல சூட்­சு­மங்­களும், நரித்­த­ன­மான தந்­தி­ரோ­பா­யங்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த யுத்­தத்தில் வெற்­றி­கொண்­ட­வர்கள், யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற தரப்­பினர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்­டிய எந்­த­வொரு உயர்ந்த மனிதப் பண்­பை­யுமே வெளிப்­ப­டுத்­த­வில்லை.

யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்­றன. இத்­த­கைய மனிதப் பண்பு வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­கான உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மட்­டத்­தி­லான எதிர்­பார்ப்பு ஒன்று பர­ப­ரப்­புடன் கூடிய ஆவ­லாக, ஏக்­க­மாக வளர்ந்து சென்று கொண்­டி­ருக்­கின்­றது. அதனைத் தணிப்­ப­தற்குப் பதி­லாக எரி­கின்ற நெருப்பில் எண்­ணெயை ஊற்றி அணைக்க முயற்­சிக்­கின்ற மோச­மான காரி­யத்­தையே அரசு செய்து கொண்­டி­ருக்­கின்­றது.

சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான எதிர்ப்பு 

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­காக, அமைத்­தி­ருந்த அர­சியல் வியூ­கங்­களின் தந்­தி­ரோ­பாயச் செயற்­பா­டுகள் கார­ண­மாக சர்­வ­தேச நாடுகள் பல அர­சாங்­கத்­திற்குப் பல வழி­களில் உதவி புரிந்­தி­ருந்­தன. விடு­த­லைப்­பு­லி­களை இல்­லாமல் ஒழித்­துக்­கட்­டி­விட வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­திற்­காக அந்த உத­விகள் எல்­லா­வற்­றையும், ஆயு­தங்­க­ளா­கவும், செயல் வழி­மு­றை­க­ளா­கவும் அர­சாங்கம் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­­தது. இந்தப் பயன்­பாட்டின் மூலம் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக பொறுப்பு கூற வேண்டும்.

அதற்­கான விசா­ர­ணை­யொன்று மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்ற சர்­வ­தேச அள­வி­லான கோரிக்­கையை அரசு ஏற்க மறுத்­தது. ஆனால், அந்த கோரிக்கை பல மட்­டங்­க­ளிலும் வலி­யு­றுத்­தப்­பட்­ட­போது, அதனை ஒப்­புக்­காக ஏற்றுக் கொண்­டது. ஆனாலும் வெளியார் எவரும் விசா­ர­ணை­களை நடத்த முடி­யாது. அந்த விசா­ர­ணை­களைத் தானே நடத்தப் போவ­தாகக் கூறி, கால தாம­தத்தின் பின்னர், கற்­ற­றிந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை நிய­மித்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது.

அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட அந்த ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களை பாதிக்­கப்­பட்ட மக்­களும், மனித உரிமை அமைப்­புக்­களும் சர்­வ­தே­சமும் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. விசா­ர­ணை­களே தேவை­யில்லை. நாங்கள் எந்தக் குற்­றமும் செய்­ய­வில்லை என்ற அர­சாங்­கத்தின் பிடி­வாதப் போக்கு கார­ண­மாக அத்­த­கைய விசா­ர­ணையை அனை­வரும் ஒப்புக் கொண்­டார்கள். எதிர்­பார்த்­த­ப­டியே, அந்த விசா­ரணை பக்­கச்­சார்­பா­ன­தா­கவும், பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்­கையை வெல்­வ­தற்குத் தவ­றிய ஒன்­றா­க­வுமே அமைந்­தது.

அந்த விசா­ரணை அறிக்­கை­கூட, அர­சாங்­கத்­தினால் குறிக்­கப்­பட்ட காலத்­தினுள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. பல்­வேறு அழுத்­தங்­களின் பின்பே, அது வெளி­யி­டப்­பட்­டது, அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த சிபா­ரி­சு­களை, தானா­கவே நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முன்­வ­ர­வில்லை. வற்­பு­றுத்­தலின் பின்பே அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன.

அந்த நட­வ­டிக்­கை­களும் கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­க­ளாக இருந்­த­னவே அன்றி, பல­ராலும் ஏற்றுக் கொள்­ளத்­தக்­க­தாக அமை­ய­வில்லை. இறுதி யுத்­த­நே­ரத்துச் சம்­ப­வங்கள் தொட­ர்­பான பொறுப்பு கூற­லுக்­கான நட­வ­டிக்­கைகள் அனைத்­துமே, அர­சாங்கம் யுத்­த­கா­லத்தில் குற்­றமே இழைக்­க­வில்லை. நீதி­யா­கவே நடந்து கொண்­டது. விடு­த­லைப்­பு­லி­களே குற்­ற­மி­ழைத்­தார்கள். நடை­பெற்ற காரி­யங்­க­ளுக்­கெல்லாம் அவர்­களே பொறுப்­பேற்க வேண்டும் என்ற ரீதி­யி­லேயே அமைந்­தி­ருந்­தன. 

இதனால், அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருந்த உள்ளூர் பொறி­மு­றை­யி­லான விசா­ரணை நட­வ­டிக்­கை­களைப் புறந்­தள்ளி, ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் ஊடாக ஒரு சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்த வேண்டும் என்ற முடி­வுக்கு சர்­வ­தேசம் முன்­வந்­தது. ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க வகையில் உள்ளூர் பொறி­மு­றையின் மூலம் நாங்­களும் விசா­ரணை செய்­ய­மாட்டோம், நடை­பெற்ற காரி­யங்­க­ளுக்கு அதன் ஊடாகப் பொறுப்பு கூறு­வ­தற்­கு­மில்லை என்ற போக்கு கார­ண­மாக சர்­வ­தேச விசா­ர­ணைக்கு வளைந்து கொடுக்க முடி­யாது. அத்­த­கைய விசா­ர­ணை­யொன்றை நடப்­ப­தற்கு அனு­ம­திக்­க­மாட்டோம் என அர­சாங்கம் வெளிப்­ப­டை­யான முரட்டுத் தனத்­துடன் பதி­ல­ளித்­துள்­ளது. அது மட்­டு­மல்­லாமல், அந்த விசா­ர­ணை­களை உரிய முறையில் நடக்­க­வி­டாமல் தடுப்­ப­தற்­கான முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது.

சாட்­சிகள் மீதான மோச­மான அச்­சு­றுத்தல் 

ஐ.நா. மனித உரிமை விசா­ரணைக் குழு நாட்­டிற்குள் பிர­வே­சிக்க முடி­யாது. அதற்­கான அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்று அர­சாங்கம் வெளிப்­ப­டை­யா­கவே அறி­வித்­தி­ருந்­தது. அத்­துடன், வளைந்து கொடுக்­காத அதன் போக்­கு­க­ளுக்கு முண்டு கொடுக்­கின்ற அதன் தீவி­ர­வாத அர­சியல் சக்­தி­களின் ஊடாக சர்­வ­தேச விசா­ரணை குழு­வுக்கு எதி­ரான அர­சியல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளையும் அரசு முடுக்­கி­விட்­டி­ருக்­கின்­றது.

அதற்­கான ஆர்ப்­பாட்­டங்கள், எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் என்­பன தாரா­ள­மா­கவே மேடை­யேற்­றப்­பட்­டன, மேடை­யேற்­றப்­பட்டு வரு­கின்­றன. விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு நாட்­டிற்குள் பிர­வே­சிப்­ப­தற்­கான நுழைவு அனு­மதி மறுக்­கப்­பட்­டாலும், விசா­ர­ணை­களை நடத்­தியே முடிப்போம் என்று ஐ.நா. மன்றம் அறி­வித்­தி­ருந்­த­தை­ய­டுத்து, அந்த முயற்­சியைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றது.

சர்­வ­தேச விசா­ரணை நடை­பெறும் என்ற அறி­வித்தல் வெளி­வந்த உட­னேயே, விசா­ர­ணையில் யாரும் சாட்­சி­ய­ம­ளிக்கக் கூடாது. அவ்­வாறு சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று பகி­ரங்­க­மா­கவே அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரா­கிய அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெலவின் ஊடாக அர­சாங்கம் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தது.

அது மட்­டு­மல்­லாமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அர­சுக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்கள் மீது, பாது­காக்­கப்­பட வேண்­டிய நாட்டின் இர­க­சி­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­னார்கள் என்ற குற்றம் சுமத்­தப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற அறி­வித்­த­லையும் அர­சாங்கம் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் நின்­று­வி­ட­வில்லை. சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்கள் நன்­றாக உணர்ந்து கொள்­ளத்­தக்க வகையில் தண்­ட­னை­ய­ளிக்­கப்­படும் என்ற செய்தி இன்னும் தெளி­வாக சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது.

அதா­வது விசா­ர­ணை­களில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்கள் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் தண்­டிக்­கப்­ப­டுவார்கள் என்று அர­சாங்கம் கூறி­யி­ருக்­கின்­றது. நாட்டின் இர­க­சி­யங்­களை வெளியே சொன்னால் அது தேசத்­து­ரோ­க­மாகும். தேசத்­திற்குத் துரோகம் செய்­ப­வர்கள் யாராக இருந்­தாலும், அவர்­க­ளுக்கு மரண தண்­ட­னைதான் கிடைக்கும். அதனால் தேசத்­து­ரோகம் என்­பது மோச­மான குற்­ற­மாகும். எனவே, அதனைச் செய்­வ­தற்கு எவரும் இல­குவில் துணி­ய­மாட்­டார்கள்.

சாதா­ரண மக்­களைப் பொறுத்­த­மட்டில் அத்­த­கைய குற்­றத்தைச் செய்­வ­தற்குக் கன­விலும் துணிய மாட்­டார்கள். ஆனாலும், சர்­வ­தேச விசா­ர­ணையில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு இந்தத் தண்­டனை பற்­றிய அறி­வித்தல் சரி­யான ஒரு பய­மு­றுத்­த­லாக அமை­யாது என்று அர­சாங்கம் எண்­ணி­யி­ருக்க வேண்டும் என்று தோன்­று­கின்­றது. அதன் கார­ண­மா­கத்தான், மீட்­சியே கிடை­யாது என்று நாட்டு மக்கள் எல்­லோரும் நன்கு அறிந்து வைத்­துள்ள பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் சர்­வ­தேச விசா­ர­ணையில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­க­ளுக்குத் தண்­ட­னை­ய­ளிக்­கப்­படும் என்று அர­சாங்கம் கூறி­யி­ருக்­கின்­றது.

குறிப்­பாக வடக்கு கிழக்குப் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கும், விசே­ட­மாக தமிழ் மக்­க­ளுக்கு, பயங்­க­ரவாதத் தடைச்­சட்­டத்தின் நடை­மு­றைகள், அதன் பாதிப்­புகள் நன்­றாகத் தெரியும். கால் நூற்­றாண்­டுக்கும் மேற்­பட்ட கால­மாக அவர்கள் அந்த சட்­டத்தின் பிடியில் சிக்கி மீட்­சி­யின்றி தவித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பல­ருக்கு அந்தச் சட்­டத்தின் பயங்­கரம் என்ன என்­பது நேரடி அனு­ப­வத்தின் மூலம் தெரியும். அதே­நேரம் அந்தச் சட்­டத்தின் கீழ் நாடளா­வியரீதியில் தமிழ் மக்கள் மறை­மு­க­மாகப் பாதிக்­கப்­பட்ட அனு­ப­வத்­தையும் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அது மட்­டு­மல்­லாமல், அர­சாங்­கத்­திற்கு எதி­ரான விசா­ர­ணையில் தொண்­ணூற்­றொன்­பது வீத­மா­ன­வர்கள் தமிழ் மக்­களே சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­க­ளாக இருப்­பார்கள் என்­பதும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. இதற்­கா­கத்தான் சாதா­ரண வாழ்க்­கையில் துரோகம் இழைப்­ப­தென்­பது பார­தூ­ர­மான குற்றச் செய­லாகக் கரு­தப்­பட்­டுள்ள போதிலும், நாட்­டுக்குத் துரோ­க­மி­ழைத்­தார்கள் என்ற குற்­றச்­சாட்­டிலும் பார்க்க, சர்­வ­தேச விசா­ர­ணை­களில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்கள், பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்று அறி­வித்­தி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

'தேசத்­து­ரோ­க­மு­மில்லை, பயங்­க­ர­வாதச் செய­லு­மில்லை – தண்­டிக்க முடி­யாது' 

இலங்கை அர­சாங்கம் மக்­களைத் தடுத்து நிறுத்­தி­னாலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கை அர­சுக்கு எதி­ரான விசா­ர­ணை­களைத் திட்­ட­மிட்­ட­படி நடத்தும் என்று மூன்­றுபேர் கொண்ட அந்த விசா­ர­ணைக்­கு­ழுவின் வல்­லு­நர்­களில் ஒரு­வ­ரா­கிய பாகிஸ்தான் உச்ச நீதி­மன்ற சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் முன்னாள் தலை­வி­யா­கிய அஸ்மா ஜெஹாங்கிர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

பின்­லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்­தி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுனர் நாயகம் சில்­வியா கார்ட்ரைட், பாகிஸ்தான் உச்ச நீதி­மன்ற சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் முன்னாள் தலை­வி­யா­கிய அஸ்மா ஜெஹாங்கிர் ஆகிய துறை­சார்ந்த வல்­லு­னர்­களே ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் விசா­ர­ணைக்­கு­ழுவின் மூன்று உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களில் பின்­லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்­தி­சாரி தவிர ஏனைய இரு­வரும் பெண்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

'விசா­ர­ணை­யா­ளர்­க­ளுடன் மக்கள் தொடர்பு கொள்­வதைத் தடுப்­பது என்­பது எந்­த­வொரு அர­சாங்­கத்­திற்கும் மிகவும் சிர­ம­மான காரி­ய­மா­கத்தான் இருக்கும். அர­சாங்கம் ஏதேச்­ச­தி­கா­ரத்தைப் பிர­யோ­கித்து மக்­களைத் தடுக்க நினைத்தால், அர­சாங்­கத்­திற்­குத்தான் அது பாத­க­மாக வந்து முடியும். அர­சுகள் ஒத்­து­ழைப்பு வழங்­கா­தி­ருந்த பல சர்­வ­தேச விசா­ர­ணை­களை நாங்கள் இதற்கு முன்னர் நடத்­தி­யுள்ளோம்' என்று விசா­ர­ணைக்­குழு உறுப்­பினர் அஸ்மா ஜெஹாங்கிர் கூறி­யுள்ளார். 

அரச ஒத்­து­ழைப்பு இல்­லாத விசா­ர­ணை­களை நடத்­திய அனு­ப­வத்தின் மூலம், இலங்­கைக்கு எதி­ரான விசா­ரணை­களை வெற்­றி­க­ர­மாக நடத்த முடியும் என்­பதே அவ­ரு­டைய துணி­வான கருத்து. அதே­நேரம் நாட்டின் இர­க­சி­யங்­களைப் பேண தவ­றி­னார்கள், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்ட விதி­களை மீறி­னார்கள் எனக் கூறி, விசா­ர­ணை­களில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­களைத் தண்­டிக்க முடி­யாது என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கூறி­யுள்­ளது. யாழ்ப்­பாணத்தில் இது­பற்றி கருத்­து­ரைத்த கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அதற்­கான கார­ணத்­தையும் விளக்கிக் கூறி­யுள்ளார்.

ஜனா­தி­ப­தியும், அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்­கின்ற அமைச்­சர்­க­ளுமே நாட்டின் இர­க­சி­யங்­களை அறிந்­த­வர்கள் - அறி­ப­வர்கள். அவர்­கள்தான் சத்­தி­யப்­பி­ர­மா­ணத்தின் அடிப்­ப­டையில் அவற்றைப் பாது­காப்­ப­தற்­கான கடப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். சாதா­ரண மக்­க­ளுக்கு நாட்டு இர­க­சி­யங்கள் தெரி­ய­வ­ரு­வ­தற்­கான வாய்ப்பு கிடை­யாது. எனவே தெரி­யாத ஒரு விட­யத்தைக் காக்க வேண்­டிய பொறுப்பும் அவர்­க­ளுக்கு இல்லை.

எனவே, இந்த வகையில் நாட்டின் இர­க­சி­யங்­களை வெளி­யிட்­டார்கள் என்று குற்­றஞ்­சாட்டி, ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் விசா­ர­ணை­களில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­களைத் தண்டிக்க முடியாது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். 'நாட்டின் இர­க­சி­யங்­களைக் காப்பதென்­பதும், போரினால் பாதிக்கப்­பட்­ட­வர்கள் தமக்­காக நீதியும் நிவா­ர­ணமும் கேட்­ப­தென்­பதும் இரண்டும் வெவ்­வேறு விட­யங்­க­ளாகும்.

இவையிரண்­டுக்கும் இடையில் தொடர்பே கிடை­யாது. எனவே தொடர்­பில்­லாத ஒரு விட­யத்தில் எவ­ரையும் யாரும் தண்­டிக்க முடி­யாது. பயங்­க­ர­வாதச் செயல் ஒன்றைச் செய்­ப­வ­ரையே பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் தண்­டிக்க முடியும். அரச பயங்­க­ர­வா­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட ஒருவர் தனக்­கேற்­பட்ட பாதிப்பு குறித்து சாட்­சி­யத்தில் எடுத்­துக்­கூறி நிவா­ரணம் தேடு­வ­தென்­பது ஒரு­போதும் பயங்­க­ர­வாதச் செய­லாக முடி­யாது. எனவே சர்­வ­தேச விசா­ரணைக் குழு­விடம் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­களைப் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தண்டிக்க முடியாது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இறுதி யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனக் கூறும் அரசாங்கம், யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில், எத்தனையோ மனித உரிமை மீறல் செயற்பாடுகளைச் செய்திருக்கின்றது. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடக்கம், அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் என்ப வற்றில் இந்த மீறல் நடவடிக்கைகள் மிகத் தெளிவாகவும், தாராளமாகவும் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன.

பூனை கண்ணை மூடினால் பூகோளம் இருண்டுவிட்டது என்று பூனை எண்ணிக்கொள்வதைப் போலவே, மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை. அதுபற்றி விசாரணைகள் நடத்துவது தேவையற்ற விடயம் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு அமைந்திருக்கின்றது. மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதில் இருந்து தப்ப முடியாது. 

அதனைத் தட்டிக்கழிக்கவும் முடியாது என்பதை அரசாங்கம் இப்போதாவது உணர்ந்து, அதற்கேற்ற வகையில் நட வடிக்கைகளை முன்னெடுப்பது நல்லது. முரட்டுப் பிடிவாதமும், நான் செய்வதே சரி, நான் சொல்வதே வேதவாக்கு என்ற வரட்டுப் பிடிவாதப் போக்கும் நாட்டை அதலபாதாளத்தில் கொண்டு சேர்க்கவே உதவும் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.